அரசியல்

“ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்” : வைகோ

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்” : வைகோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு, திருத்தப்பட்ட அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த புதிய உத்தரவால், டெல்டா பகுதி மக்கள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதியும் பொதுமக்களின் கருத்து கேட்பும் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரையில் 5,099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு, தனியார் நிறுவனமான வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. பொதுத்துறை நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு நடத்த கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.

“ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்” : வைகோ

கடந்த 2019 டிசம்பர் 5ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பினேன். “காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்திருக்கிறது? அதற்காக மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது?

அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு தோண்டுகின்ற இடங்கள் விளை நிலங்களா? அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன? ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா?” என்று கேள்விக் கணைகள் தொடுத்திருந்தேன்.

என்னுடைய கேள்விகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், “காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்குச் சுற்றுப்புறச் சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரச்னைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்.” என்று விளக்கம் அளித்தார்.

“ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்” : வைகோ

தற்போது மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

காவிரிப் பாசன மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனைவதும், அதற்காக மக்கள் கருத்தைக் கேட்க மாட்டோம் என்று எதேச்சாதிகாரமாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தமிழகத்தின் உயிராதாரமான காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனம் ஆக்கும் முயற்சி தொடர்ந்தால் சுமார் 56 லட்சம் மக்கள் சொந்த மண்ணிலேயே வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமை நடக்கும்.

தமிழக மக்கள் ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதை ஒருகாலும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதை மத்திய பா.ஜ.க அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் உணர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories