முரசொலி தலையங்கம்

ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!

வேளாண் மக்களின் மனங்களை மகிழ்விப்பதன் மூலமாக உணவுப் பொருள் உற்பத்தியையும் அதிகரிக்கும் முதலமைச்சரின் நல்ல எண்ணத்தின் வெளிப்பாடுகள் இவை என முரசொலி தலையங்கம் புகழாரம் சூட்டியுள்ளது.

ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

20.08.2025

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்மாதிரியான ஒருதிட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். வேளாண் பெருமக்கள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழியாக பயிர்க் கடன் வழங்கும் திட்டம்தான் அது!

கடந்த 17 ஆம் தேதியன்று தருமபுரியில், இணைய வழியில் பயிர்க்கடன் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். பயிர்க் கடன் பெறுவதற்காக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு இனி நேரில் வரத் தேவையில்லை. இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். ஒரு வார காலம் காத்திருக்கத் தேவையில்லை. அன்றைய தினமே கடன் வழங்கப்பட்டுவிடும். இதனைத்தான் முதல்மைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். தங்களது கூட்டுறவுக் கடன் சங்க உறுப்பினர் எண் அல்லது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்புக் கணக்கு எண்ணைக் கொடுத்தால் மட்டுமே போதுமானது. இந்த விண்ணப்பமானது வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை ஆகிய இருதுறைகளிலும் சரி பார்க்கப்படும். அன்றைய தினமே கடன் தொகையானது வேளாண் பெருமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன் வழங்கப்படும்.

தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டமானது அனைத்து மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதை விட முக்கியமாக பயிர்க்கடன் வாங்க எளிமையான முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் போலவே சுய உதவிக் குழுக்களுக்கான கடனும், சிறு குறு கடன்களும் எளிமைப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிட பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. நாட்டில் கடன் வழங்கும் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் அதிகபட்சம் மூன்று லட்சம் வாங்கி, ஓர் ஆண்டுக்குள் செலுத்தி விட்டால் வட்டி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நடைமுறையும் இருக்கிறது. ஆனால் உடனடியாக கடன் வழங்கும் திட்டம் என்பது இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நாளில் வழங்கும் திட்டமாக இதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வடிவமைத்துள்ளார்கள்.

பயிர்க் கடன் வாங்குவதற்கு பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். இதனை வாங்கி விண்ணப்பிப்பதற்குள் தாமதம் ஆகிவிடுகிறது என்று வேளாண் பெருமக்கள் சொல்லி வந்தார்கள். அதனைப் போக்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்த ஆண்டு ரூ.17 ஆயிரம் கோடி வரை பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், 3 ஆயிரம் கோடி ரூபாய் கால்நடை வளர்ப்புப் பிரிவு கடன் வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்து இருந்தார். கடந்த ஆண்டில் 15 ஆயிரத்து 62 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை 17.37 லட்சம் விவசாயிகள் பெற்றார்கள். 4.43 லட்சம் பேருக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்புப் பிரிவு கடன்கள் வழங்கப்பட்டன. இதனை இந்த ஆண்டு அதிகப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். பயிர்க் கடன் வழங்கும் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கும் முறையும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு மண்ணும் செழித்துள்ளது. வேளாண் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பாசனப் பரப்பும் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 457.08 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி அடையப்பட்டுள்ளது. 2020 - 21 ஆம் ஆண்டில் எக்டருக்கு 2,235 கிலோவாக இருந்த உணவு தானியப்பயிர்களின் உற்பத்தித்திறன் 2024 - 25 ஆம் ஆண்டில் 2,871 கிலோவாக அதிகரித்துள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம், குறுதானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம் என்ற அளவில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

இந்த வளர்ச்சியை அதிகரிப்பதற்காகத்தான் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மொத்தமுள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, கடந்த நான்கு ஆண்டுகளில் பத்தாயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 52 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் மீண்டும் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டு வேளாண் பயிர்கள், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை போர்த்தியுள்ளன.

இந்த நிலையில் நெல் கொள்முதல் விலையையும் முதலமைச்சர் அவர்கள் அதிகரித்துள்ளார்கள். விவசாயிகள் இனி குவிண்டாலுக்கு 2500 ரூபாய் பெறுவார்கள் என்று முதலமைச்சர் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் அறிவித்துள்ளார்கள். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு 2,548 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதாவது சாதாரண ரகத்துக்கு 131 ரூபாயும், சன்ன ரகத்துக்கு 156 ரூபாயும் உயர்த்தி வழங்கி இருக்கிறார் முதலமைச்சர். இதனால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

வேளாண் மக்களின் மனங்களை மகிழ்விப்பதன் மூலமாக உணவுப் பொருள் உற்பத்தியையும் அதிகரிக்கும் முதலமைச்சரின் நல்ல எண்ணத்தின் வெளிப்பாடுகள் இவை.

banner

Related Stories

Related Stories