முரசொலி தலையங்கம்

“தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக பார்க்கவும்..” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிய முரசொலி !

கிண்டி ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ‘துக்ளக்’ அரைகுறை வாசகர்கள் சொல்வதைக் கேட்டுப் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக முதலில் பார்க்கவும்.

“தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக பார்க்கவும்..” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தி.மு.க.வும் விடுதலைப் போராட்ட வீரர்களும் - 2

இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மணிமண்டபங்கள் - சிலைகள், பெரும்பாலும் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.

* பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை!

* பாரதியின் இல்லம் அரசு இல்லம் ஆனது!

* பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம்!

* மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம்!

* தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்!

* வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி!

* வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னம் ஆனது!

* விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்துப் பயணம்!

* தியாகிகள் மணிமண்டபம்

* சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம்!

* பூலித்தேவன் நினைவு மண்டபம்!

* தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு!

* மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு!

* நேதாஜிக்கு சிலை!

* கக்கனுக்கு சிலை!

* சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!

- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

“தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக பார்க்கவும்..” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிய முரசொலி !

இந்த வரிசையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களைப் போற்றி வருகிறார்.

* சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஏராளமான விழாக்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளன.

* செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டார். வ.உ.சி. நூற்றாண்டு மலர் 'தமிழரசு' சார்பில் வெளியிடப்பட்டது. வ.உ.சி.யின் நூல்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி பெரிய கார்டன் சாலை, வ.உ.சி. சாலை என மாற்றப்பட்டது. ஒட்டப்பிடாரம், நெல்லை மண்டபங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. வ.உ.சி. மறைந்த நவம்பர் 18 தியாகத் திருவுருவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* மகாகவி பாரதியார் மறைந்த நூறாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தார். கடந்த ஆண்டு முழுவதும் பாரதி விழா நடத்தப்பட்டுள்ளது. பாரதியார் பிறந்த நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். மாநில அளவில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டன. ‘பாரதி இளம் கவிஞர்’ விருது வழங்கப்பட்டது. பாரதி ஆய்வாளர்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. பாரதியார் இல்லத்தில் வாரம் தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரப் பூங்காவுக்கு பாரதியார் பெயர் சூட்டப்பட்டது. பாரதி நினைவு நூற்றாண்டு மலர் ‘தமிழரசு’ சார்பில் வெளியிடப்பட்டது.

* உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்கவும் புதுப்பிக்கவும் அரசு சார்பில் 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டது.

* கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையும், மருது சகோதரர்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

* கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது.

* விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

* காந்தி மண்டபம், அருங்காட்சியகம், பெருந்தலைவர் காமராசர் மண்டபம், பெரியவர் பக்தவத்சலம் மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த 3. 36 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

* சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் அவர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

* தனது வாழ்நாளில் 20 முறை தமிழகம் வந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்து தான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாக சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்து, அதனை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

“தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக பார்க்கவும்..” - ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிய முரசொலி !

* இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான நிதிக் கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது, தமிழ்நாடு அரசு.

* விடுதலைப்போராட்டத்தின் பவள விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

* அதுபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது நம் அரசு.

* விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 15 அன்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இவை எதையும் தெரிந்துகொள்ளாமல் பொத்தாம் பொதுவாக, விடுதலைப் போராட்ட வீரர்களை மறைத்து விட்டார்கள் என்று சொல்வது அறியாமை ஆகும்.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. 1967க்கு முன்னதாக தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக இருந்த நினைவு மண்டபம் என்பவை மூன்று.

சென்னை காந்தி மண்டபம் 27.1.1956 அன்று அமைக்கப் பட்டது. கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபமானது 30.5.1956 அன்று அமைக்கப்பட்டது. ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி. அவர்களது இல்லம் நினைவு இல்லமாக மாறிய நாள் 7.8.1957 ஆகும். இவை மூன்றுதான் இருந்தன.

1967 ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான் அனைத்துத் தியாகிகளுக்கும் ஆண்டுதோறும் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் தியாகிகள் போற்றப்பட்டார்கள் என்றாலும், அதிகமான நினைவுச் சின்னங்களை எழுப்பியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

பாரதி வாழ்ந்த எட்டையபுரம் வீட்டை அரசு இல்லமாக தி.மு.க. அரசு ஆக்கி ஐம்பது ஆண்டுகள் (12.5.1973) ஆகிவிட்டன. மொத்த தியாகிகளுக்கும் சேர்த்து தியாகிகள் மணிமண்டபத்தைக் கட்டியவர் கலைஞர். தில்லையாடி வள்ளியம்மைக்கு நினைவகம் அமைத்த நாள் 13.8.1971.

சுதந்திர தினப் பொன்விழா நினைவுத் தூணை 1997 ஆம் ஆண்டும், குடியரசு பொன்விழா நினைவுத்தூணை 2001 ஆம் ஆண்டும், சிப்பாய் புரட்சி நினைவுத் தூணை வேலூரில் 1998 ஆம் ஆண்டும் திறந்து வைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

கிண்டி ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ‘துக்ளக்’ அரைகுறை வாசகர்கள் சொல்வதைக் கேட்டுப் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனக்குத் தரப்பட்ட வேலைகளை ஒழுங்காக முதலில் பார்க்கவும்.

- முரசொலி தலையங்கம்

28.10.2023

banner

Related Stories

Related Stories