முரசொலி தலையங்கம்

“சித்திரை திருவிழா Vs அனுமன் ஜெயந்தி ஊர்வலம் - இந்தியாவே ‘தமிழ்நாடு’ மாதிரி மாறட்டும்” : முரசொலி !

தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுவதாக சிவசேனா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“சித்திரை திருவிழா Vs அனுமன் ஜெயந்தி ஊர்வலம் - இந்தியாவே ‘தமிழ்நாடு’ மாதிரி மாறட்டும்” : முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பச்சைப்பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியதை பல லட்சம் மக்கள் கண்டு களித்திருக்கிறார்கள். திருவண்ணாமலையில் சித்திரை பௌர்ணமி விழாவில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்திருக்கிறார்கள். திருஉத்தரகோச மங்கை கோயில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்குப் பின்னால் நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கெடுத்தார்கள்.

மங்கலதேவி கண்ணகி கோவில் முழு நிலவு விழாவுக்காக தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமல்ல, கேரள மக்களும் வந்திருந்தார்கள். இவை அனைத்தும் ஒரே நாளில் பல்வேறு ஊர்களில் தமிழ்நாட்டில் நடந்த ஆன்மிகப் பெருவிழாக்கள். எங்கும் எந்த அசம்பாவித சம்பவமும் இல்லை. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் சில நேரங்களில் தேவையற்ற குழப்பம் கூட ஏற்படும். அதனை தவிர்க்க முடியாது. அந்த சிறு குழப்பம் கூட இல்லாமல் நடந்து முடிந்துள்ளது விழாக்கள்.

அதுவும் கள்ளழகர் வருகையின் போது பர்தா அணிந்த ஒரு இசுலாமியப் பெண், கூட்டத்தினுள் முந்தியடித்து வந்து, வணங்கியது மட்டுமல்லாமல் - மாலையைக் கேட்டு வாங்கி தன்னோடு வந்த ஒருவருக்கு அணிவிக்கச் சொன்னார். அர்ச்சகரும் மாலையை அணிவித்த காட்சி என்பதுதான் எத்தகைய பண்பட்ட மண்ணாக தமிழ்மண் இருக்கிறது என்பதன் அடையாளம் ஆகும்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது திராவிடக் கொள்கை, கோட்பாடுகளைக் கொண்ட ஆட்சி. அந்த ஆட்சி அனைத்து மக்களுக்கு மான ஆட்சி. அனைத்து உணர்வுகளையும் மதிக்கும் ஆட்சி. எல்லோரும் சமம் எனும் ஆட்சி.

எல்லார்க்கும் எல்லாம் என்ற ஆட்சி. இத்தகைய எண்ணம் கொண்ட அரசியல் - ஆட்சியியல் - மக்கள் எண்ணம் - இறையியல் - இந்தியா முழுவதும் உருவாகுமானால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? உருவாக வேண்டும் என்பதே நமது விருப்பம்!

தமிழகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்த இறையியல் ஊர்வலங்கள் அனைத்தும் அமைதியாக நடந்த அதே நாளில், டெல்லியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையாக முடிந்திருக்கிறது. வடமேற்கு டெல்லி ஜஹாங்கீர் புரியில்தான் இப்படி நடந்துள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

பல மணிநேரம் கல்வீச்சு நடந்துள்ளது. வாகனங்கள் திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன. ஜஹாங்கீர் பகுதி மட்டுமல்ல; வடமேற்கு டெல்லி முழுமையும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த வன்முறை வட மாநிலங்கள் முழுக்க பரவுமோ என்ற அச்சம் சூழ்ந்துள்ளது.

இதுதான் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்குமான வேறுபாடு மாறுபாடு ஆகும். தந்தை பெரியார் உருவாக்கிய சமத்துவப் பண்பாடு என்பது இதுதான். திராவிட இயக்கம் விதைத்த பண்பாடு என்பது இதுதான். திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்க நினைக்கும் பண்பாடு இதுதான். இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அகில இந்தியத்தலைவர்கள் 13 பேர் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட 13 கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உணவு, உடை, நம்பிக்கை, திருவிழாக்கள் மற்றும் மொழியை வைத்து நம் சமூகத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் வெளிவருவதும் அதனைத் தொடர்ந்து வன்முறை மோதல்கள் நடப்பது அதிகரித்து வருவதாகவும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதும் அதிர்ச்சியூட்டு வதாகவும் 13 கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெறுப்பூட்டும் பிரசாரங்களை மேற்கொள்ள அரசு ஆதரவுடன் சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுவது வேதனை தருவதாகவும், இத்தகைய வெறுப்பு பிரசாரங்களைப் பார்த்த பின்னும், பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது கண்டு தாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயுதம் தரித்த தனியார் கும்பல்களுக்கு அரசு ஆதரவளிப்பதற்கு பிரதமர் மோடியின் மவுனம் சாட்சியாக விளங்குகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன அமைதியை பாதுகாக்கவும் விஷம் தோய்ந்த கருத்தியல்கள் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை எதிர்ப்பதிலும் இணைந்து செயல்பட தாங்கள் உறுதி பூண்டிருப்பதாகவும் 13 தலைவர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கின்றது.

சமூகத்தைப் பிளவுபடுத்தும் திட்டமிட்ட சதியை முறியடித்து அமைதி காப்போம் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள தலைவர்கள், அமைதியையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இணைந்து செயல்படுமாறு தங்கள் கட்சிகளின் அனைத்து மாநில அமைப்புகளையும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையானது இந்தியாவே, ‘தமிழ்நாடு’ மாதிரி மாறட்டும் என்பதற்கு அடித்தளம் அமைக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.

நாட்டில் தற்போது நடைபெறும் அசாதாரண சம்பவங்கள் பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் மாநாட்டை மும்பையில் நடத்த ஆலோசிக்கப்படுவதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும், வேலையில்லாத பிரச்சினை, பண வீக்கம், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, பல்வேறு சமூகங்கள் இடையே பகையை மூட்டிவிட நடக்கும் முயற்சிகள் ஆகியன குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் இதுவரை அமைதியாக நடத்தப்பட்டன என்றும், ஆனால் நடப்பு ஆண்டு விரைவில் தேர்தல் நடைபெற விருக்கும் மாநிலங்களில் திட்டமிட்டு வன்முறை அரங்கேற்றப்படுவதாக சஞ்சய்ராவத் கூறியுள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறையை தூண்டி விடுவதாக சிவசேனா ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வன்முறை என்பது இருபக்கமும் கூர்தீட்டப்பட்ட ஆயுதம் ஆகும். பயன்படுத்தியவரையே பதம் பார்க்கும். அதன் பழக்கம் அதுதான். அத்தகைய வன்முறையால் அழிந்தவர்களே அதிகம். அது புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும். புரியாமல் போனால், மக்களே ‘தேர்தல்கள்’ மூலம் புரிய வைப்பார்கள்.

banner

Related Stories

Related Stories