தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படுவதை விமர்சித்த, பா.ஜ.க.வின் அடிமை குரல் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து கோவையில் தி.மு.க மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையேற்றார். கோவை மாவட்ட தி.மு.க எம்.பி கணபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது தி.மு.க இளைஞரணி.
அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் Dravidian Stock கூட்டம்!” என பதிவிட்டுள்ளார்.