மு.க.ஸ்டாலின்

"சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலர்ந்துவிடாது. சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உங்களில் ஒருவன் பதில்கள்-3

கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு.

வணக்கம்.

கேள்வி: அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

பதில்: சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இதற்காகச் சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர் – 92 வயதான பாலகிருஷ்ணன் அவர்கள், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார்.

தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.

உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பாத்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும்.

மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறைய புத்தங்களைப் படிக்கும் வாய்ப்பு சிறைச்சாலையில் கிடைத்தது. அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலைத் தனிமையைப் போக்க நல்ல நண்பன் புத்தகங்கள்தான்.

கேள்வி: ‘கள ஆய்வில் முதலமைச்சர்‘ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது?

பதில்: வேலூர் புறநகர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தேன்.

அதேபோல மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் மையத்தையும் சென்று பார்த்தேன்.

உணவு தரமாக தயார் ஆகிறதா, உரிய நேரத்துக்கு கொண்டுபோய்க் கொடுக்கப்படுகிறதா என்று பார்த்தேன்.

சாப்பிடுகிற உணவு சுவையாவும், சூடாவும் இருப்பதாகப் பள்ளிக் குழந்தைகள் சொன்னார்கள்.

இதைக் கேட்டபோது, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதிகாரிகள், அலுவலர்களோடு இரண்டு நாட்கள் அமர்ந்து – வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிற அனைத்துப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன்.

அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு சில இடங்களில் சுணக்கம் இருந்தாலும் – அதுவும் அன்று முதல் சரி செய்யப்பட்டு விட்டது.

யார் மேலேயும் நம்பிக்கை இல்லாமலோ இந்த ஆய்வுத் திட்டத்தை நான் தொடங்கவில்லை.

எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்கிற மனநிறைவை நான் அடைவதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.

வருகிற 15,16 தேதிகளில் சேலத்துக்குச் செல்கிறேன். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

இன்னும் திட்டங்கள் எவ்வாறு சிறப்பாகக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

"சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கேள்வி: புதுமைப் பெண் - கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்தத் திட்டத்தின் பயனை மாணவிகள் உணரத் தொடங்கி இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பதில்: நிச்சயமாக கருதுகிறேன்! 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள், உயர்கல்விக்கு வந்தால், அவங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிற மகத்தான திட்டம் இது.

முதலில், 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவிகள் இந்தத் தொகையைப் பெற்றார்கள். பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடந்த இரண்டாம் கட்டத் தொடக்க விழா மூலமாக மேலும் 1 லட்சம் மாணவிகள் பயன்பெறப் போகிறார்கள். உதவித்தொகை பெற வந்த மாணவிகளின் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தேன்.

12-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம் திருத்தணியைச் சேர்ந்த மகாலட்சுமி. குடும்பச் சூழல் காரணமாக பணம் செலவு செய்ய முடியாத நிலை இருந்திருக்கிறது.

அரசாங்கமே ஆயிரம் ரூபாய் தருவதை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அடம்பிடித்து, இப்போது கல்லூரியில் சேர்ந்திருப்பதாக மகாலட்சுமி பேட்டி கொடுத்திருக்கிறார். வெள்ளாத்தூரைச் சேர்ந்த சுல்தானா பர்வீன் என்கிற மாணவி, ஓராண்டாகக் கல்லூரிக்கு போகவில்லை.

இந்தத் திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்பிறகுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். அவருக்கும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. இவ்வாறு எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக அமைந்திருக்கிறது இந்த திட்டம். தலைமுறை தலைமுறைக்கும் இது பயனளிக்குற திட்டமாக அமையப் போகிறது.

கேள்வி: பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான், திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே?

பதில்: தூத்துக்குடியில் போராடுடியவர்களைத் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, 'டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா?

அவர் அப்படித்தான் பேசுவார்! அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்.

முன்பு சொன்ன புதுமைப் பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. அது எல்லாத்தையும் வருகிற ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம். நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன்.

"சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவதை என்பதை நான் தெரிந்து கொண்டேன். பா.ஜ.க ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அது எதற்குமே பிரதமர் பதில் சொல்லவில்லை. 'நாட்டு மக்கள் எனக்குக் கவசமாக இருக்கிறார்கள்' என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார்.

'சேறு வீசுங்கள் - தாமரை மலரும்' என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நீர்நிலைகளில் மலரும் பூதான் தாமரை. அதற்காகத் தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது. சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது.

இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை. நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை.

சேதுசமுத்திரத் திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளைத் தி.மு.க உறுப்பினர்கள் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை.

கேள்வி: தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறாரே பிரதமர்?

பதில்: பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்த அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறவர் இதைக் கேட்கலாமா?

கேள்வி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கிறது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடர்கிறதே?

பதில்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது.

தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. மகன் தலைமறைவாகிட்டான். இது ஒரு சம்பவம்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார். காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது இரண்டாவது சம்பவம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது மூன்றாவது சம்பவம். மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்?

இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர்.

அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தைச் சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.

இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது?

"சேறு இருக்கிற இடமெல்லாம் தாமரை மலர்ந்துவிடாது".. மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கேள்வி: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பதில்: ஆமாம்! ஆமாம்!

இவர்கள் தமிழ்நாட்டுக்காக அறிவித்த ஒரே ஒரு திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும்தான். அதைக் கட்டுவதற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியைக் கேட்டிருப்பதாக சொன்னார்கள். ஜப்பான் நாட்டு நிதி உதவி வரவில்லை. இவர்களாவது ஒதுக்கி இருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. தமிழ்நாட்டைப் புறக்கணிப்பது இதன் மூலம் தெரியவில்லையா?

கேள்வி: அதானி குழுமத்திற்கு எதிராக வந்துள்ள அறிக்கை பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கோ, நாடாளுமன்ற விவாதத்திற்கோ ஒன்றிய அரசு தயாராக இல்லாமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது.

எனவே, இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும்.

சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் அவர்கள் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: ராகுல்காந்தி, கார்கே போன்றவர்களது பேச்சுகளை நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்களே?

பதில்: இது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்களின் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியாது.

கேள்வி: 'அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைத்திருக்கிறது என்று பிரதமர் பேசியிருப்பது ஆரோக்கியமான அரசியலா?

பதில்: அமலாக்கத்துறை எதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும் நல்லது இல்லை. தன்னாட்சி அமைப்புகளுக்கும் நல்லது இல்லை. ஜனநாயகத்துக்கும் நல்லது இல்லை.

கேள்வி: இரட்டை இலைச் சின்னம் அ.தி.மு.க.-விற்கு கிடைத்துவிட்டதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு சாதகம் என்கிற கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல் – இவ்வாறு இதற்கு முன்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட சின்னம்தான் இரட்டை இலை என்பதை மறந்துடக் கூடாது.

கேள்வி: ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. ஏட்டிக்குப் போட்டி என்ற தமிழ்நாட்டு அரசியலில் இருந்து விலகி - ஆக்கப்பூர்வமான அரசியல் நடத்துவதற்கு முயன்றுள்ள நீங்கள், அதில் வெற்றி பெற்றிருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்: செயல் - அதுவே சிறந்த சொல் என்று நினைக்கக் கூடியவன் நான்.ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளாக இருந்தால், எதையும் செயல்படுத்தக் கூடியவன் நான். அவதூறுகள், பொய்கள், விதண்டாவாதங்களுக்குப் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மக்கள் என்னை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அவங்களுக்கான முழு நன்மைகளையும் எனது ஆட்சிக்காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒன்றே எனது இலக்கு.

தங்களது இருப்பைக் காண்பித்துக் கொள்வதற்காக வீண் அவதூறுகளை யார் சொன்னாலும் அதற்கு நான் பதில் அளிப்பது இல்லை. அதைப் படிக்கிறேன். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

அடுத்த நொடியே, ஆக்கப்பூர்வமாக அடுத்து என்ன செய்யலாம் என்கிற சிந்தனைக்குள் நான் சென்று விடுவேன்.என்னுடைய இந்தப் பாணி எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. அவர்களுக்கு அரசியல் செய்ய நான் வாய்ப்பு அளிக்கவில்லை என்பதுதான் அவர்களது அதிகப்படியான கோபம் என்று நினைக்கிறேன்.

ஆக்கப்பூர்வமான அரசியல் என் பாணி. அவதூறு அரசியல் அவர்கள் பாணி.

banner

Related Stories

Related Stories