மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு நேற்று நிறைவேற்றியுள்ளது. இன்று மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு, மாநிலங்களவையில் பேசிய பாஜக MP அனுராக் தாக்கூர், வஃக்பு வாரிய சொத்துக்களை கார்கே குடும்பத்தினர் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அடிப்படை ஆதாரமற்ற அவரது இந்த அபாண்ட குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது பேச்சுக்கு அனுராக் தாக்கூர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
முன்னதாக மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ”என் மீது புகார் கூறிய பா.ஜ.க உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும். என் மீதான புகாரை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார். குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால் அவர் (அனுராக் தாக்கூர்) ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் ஒரு தொழிலாளரின் மகன். அந்த இடத்திலிருந்து வளர்ந்து இன்று இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பா.ஜ.க.,வினரின் பயமுறுத்தல்களுக்கு எல்லாம் நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் இவர்களிடம் நான் வீழ மாட்டேன். அனுராக் தாக்கூருக்கு பா.ஜ.க வினர் அறிவுரை வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.