ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு விரோதமாக மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., உள்ளிட்டவற்றை கொண்டு வந்ததோடு, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மும்முரம் காட்டியது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இஸ்லாமியர்களும் போராட்டம் நடத்தினர்.
மேலும் நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக ஒருமித்த குரலையும் எழுப்பினர். இருப்பினும் நேற்று (ஏப்.02) வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று நள்ளிரவு 2 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பாஜக மற்றும் அதன் சில கூட்டணி கட்சிகள் என மொத்தன் 288 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதே வேளையில் இந்த மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 232 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை பெற்ற பாஜக இந்த மசோதாவை மக்கலவையில் நிறைவேற்றியுள்ளது.
இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு :
பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள்.
இந்தச் சட்டத் திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம். ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாகத் திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.
சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இசுலாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டபூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன்.