நாடாளுமன்ற மக்களவையில், தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இந்த கேள்வி நட்சத்திர கேள்வி என்பதால் அதன்மீது தமிழச்சி தங்கபாண்டியன் துணைக்கேள்வியும் கேட்டார்.
அதாவது, “தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். ரெயில் பெட்டிகள் சென்னை ஐ.சி.எப்.பில் உருவாக்கப்படுவதாக இருந்தாலும், அந்த ரெயில்களில் வட இந்திய உணவுகளே வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் புறக்கணிக்கப்படுகிறது. பயணிகள் விருப்பத்தின் பேரில் உணவுப்பட்டியல் பெற்று இருக்கீறீர்களா? தென் இந்திய உணவுகள் வழங்கப்படுமா? அதுபோல ரெயில் உணவக தொழிலாளர்கள் இந்தியிலேயே பெரும்பாலும் பேசுகிறார்கள். இது பயணிகளுக்கு கடினமாக இருக்கிறது. அவர்கள் கட்டாயம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச வேண்டும். மேலும் மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு நேரடி வந்தேபாரத் ரெயில்கள் இயக்க வேண்டும்” என கேட்டார்.
இதற்கு அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்கையில், “பல ரெயில்கள் தரப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அனைவருக்குமான வளர்ச்சி என்ற பிரதமரின் அணுகுமுறையால் அனைத்து மாநிலங்களும் பயன்பெறுகின்றன. வந்தேபாரத் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது தரமான சேவை வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டு இருந்தார். பயணிகளுக்கு உள்ளூர் உணவுகளை வழங்க புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. கேரளாவில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை விரிவுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” தெரிவித்துள்ளார்.