இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை இம்முறை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஒன்றியத்தில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலக் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், "நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் கோயில் திறப்பு ஒரு காரணியாக இருக்குமா என்பதைக் காலம்தான் சொல்ல முடியும்.
மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். எதேச்சதிகாரத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வார்கள். இந்தியா கூட்டணி உருவானதால் பா.ஜ.க அச்சத்தில் உள்ளது. இதனால்தான் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது " என தெரிவித்துள்ளார்.