மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிருவாகி ஒருவர் பழங்குடி சமூக இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி இந்தியாவையே உலுக்கியது. இந்த விவாகரத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், வேறு வழியின்றி பாஜக நிர்வாகி மீது ம.பி அரசு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அதே மத்திய பிரதேசத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் இருவரை தாக்கி மலத்தை திங்கவைத்த கொடுமை நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி நார்வார் பகுதியில் பட்டியலின இளைஞர் இருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு நிற்காமல் அவர்களை கடுமையாக தாக்கி அந்த இளைஞர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அதோடு அவர்களை மலத்தை உண்ணவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இரண்டு பெண்கள் உட்பட ஆறு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், போலிஸார் விசாரணையில் அந்த இளைஞர்கள் மேல் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்பதும், இது ஒரு பொய் குற்றசாட்டு என்பதும் தெரியவந்துள்ளது. சிறுநீர் கழித்த விவகாரத்தை தொடர்ந்து இந்த விவகாரம் மத்திய பிரதேச மாநிலத்தின் மற்றொரு அவலமாக பார்க்கப்படுகிறது.