கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஷா நவாஸ். மருத்துவரான இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் hi என மெசேஜ் வந்துள்ளது.
இது யார் என்று தெரியாததால் அவர் அந்த எண்ணுக்கு பதில் எதுவும் அனுப்பவில்லை. ஆனால் தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. மேலும் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பணம் கொடுக்காவிட்டால் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துவிடுவதாக ஷா நவாஸ் தொலைபேசியில் பெண் ஒருவர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் நிர்வாண புகைப்படங்கள் வந்த எண்ணுக்கு பணம் தருவதாக கூறி போலிஸார் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து மர்ம கும்பல் மருத்துவரை தொடர்பு கொண்டு திருச்சூர் ரயில் நிலையம் அருகே பணத்தை பெற்று கொள்வதாக கூறியுள்ளனர். பின்னர் அங்கு மறைந்திருந்தபோது, மருத்துவரின் கார் அருகே வந்த பெண்ணை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காயங்குளத்தைச் சேர்ந்த நிசா என்பது தெரியவந்தது.
மேலும் திட்டம்போட்டு மருத்துவரிடம் நிசா மற்றும் நௌஃபியா ஆகிய இரண்டு பெண்கள் பணத்தை பறிப்பதற்காக அவருக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து நிசா,நௌஃபியா இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.