இந்தியா

சொத்துக்கு ஆசைப்பட்டு 20 ஆண்டாக 5 பேரை கொலை செய்த கொடூரன்: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

பூர்வீக சொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தையே விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்கு ஆசைப்பட்டு 20 ஆண்டாக 5 பேரை  கொலை செய்த கொடூரன்: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் தியாகி. இவரது மகன் ரேஷு. அண்மையில் இவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ரூ. 5 கோடி மதிப்பிலான பூர்விக சொத்துக்காக பிரஜேஷ் தியாகியின் சகோதரர் லீலு என்பவர் 20 ஆண்டுகளாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை விஷம் வைத்து கொலை செய்ததை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து லீலுவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2001ம் ஆண்டு தனது இரண்டாவது சகோதரர் சுதிர் தியாகியை விஷம் வைத்து கொலை செய்துள்ளார் லீலு. பிறகு சில மாதங்கள் கழித்து அவரது இளைய மகள் பாயலையும் விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார்.

இந்த கொலைகள் குறித்து யாருக்கும் சந்தேகம் வராததுபோல் குடும்ப உறுப்பினர்களையும் ஏமாற்றிவந்துள்ளார். இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுதிரின் மூத்த மகள் பாரூலை கொலை செய்துள்ளார்.

முன்னதாக கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மூத்த சகோதரர் பிரிஜேஷ் தியாகியின் மகன் நிஷுவை கொலை செய்துள்ளார். பின்னர் கடந்த மாதம் இவரது இளைய மகன் ரேஷு கொலை செய்துள்ளார். இந்த கொலையில்தான் லீலு போலிஸிடம் சிக்கியுள்ளார்.

மேலும் கொலை செய்த அனைவரது சடலங்களையும் இரவு நேரங்களில் அருகில் உள்ள ஆறு, ஏரிகளில் வீசியுள்ளார். இதனால் லீலு மீது யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது.

இதையடுத்து கடந்த வியாழனன்று லீலுவை போலிஸார் கைது செய்தனர். கொலைகளுக்கு உடந்தையாக இருந்த லீலுவின் நண்பர்கள் ராகுல், சுரேந்திரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பூர்வீக சொத்துக்காக குடும்பத்தையே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories