இந்தியா

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” - அரசு அறிவிப்பு!

முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு கொரோனா தொற்று பாதித்திருந்தால் மூன்று மாதங்களுப்பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என இந்திய ஒன்றிய அரசு அறிவிப்பு.

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” - அரசு அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் இன்னும் 18 - 45 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெறவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துத் தெளிவான நெறிமுறைகள் வெளியிடப்படாமல் இருந்தன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகளுக்கான தேசிய மருத்துவ வல்லுநர் குழு புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்னர் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் மூலம் தடுப்பூசி பெறுபவர்களை ஸ்கிரீனிங் செய்யவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கர்ப்பணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories