அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரின் கழுத்துப் பகுதியில் மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரி முட்டியால் அழுத்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்தும், மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அதேபோன்று மற்றொரு சம்பவம் இந்தியாவில் ராஜஸ்தான் போலிஸாரால் நடந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்த முகேஷ் மாஸ்க் அணியாததைக் கண்டு அங்கிருந்த காவலர் ஒருவர் முகேஷை அழைத்து “மாஸ்க் எங்கே? ஏன் அணியவில்லை” என கேட்டுக்கொண்டே அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மீண்டும் தாக்கவந்த போலிஸ்காரரை முகேஷ் கையால் தடுத்ததால் ஆத்திரமடைந்த அவர் முகேஷை கீழே தள்ளிவிட்டு அவரின் கழுத்தில் முட்டியால் அழுத்தியுள்ளார். இதனிடையே அருகில் இருந்த போலிஸார் இருவரையும் விலக்கினார். பின்னர் முகேஷை கைது செய்த போலிஸார், காவலர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது முகேஷ்குமாரின் கழுத்தில் முட்டியால் அழுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலிஸார் மக்களை அணுகும் விதம் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் ராஜஸ்தான் போலிஸாரின் இந்த நடவடிக்கை அத்தகைய குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.