வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயுவை மானிய விலையில் வழங்கி வந்தது.
இந்தநிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததும் மானிய விலை திட்டத்தை “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)" என்று புதிய பெயர் சூட்டி, புதிய திட்டம் போல் செயல்படுத்தினார்.
மேலும் ஏழைகளுக்கு எரிவாயு இணைப்பு இலவசம் என்று கூறினார். ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சமையல் எரிவாயு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவித்து வந்தார்கள்.
ஆனால் வழக்கம்போல சொல்வது ஒன்றும், செய்வதும் ஒன்றுமாக ஆளும் பா.ஜ.க அரசு சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தியது. இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.695க்கு விற்கப்பட்ட நிலையில், இனிமேல் 714 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.
மும்பையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.695 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.21.50 பைசா உயர்ந்து, ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்ந்து, ரூ.734 ஆகவும் உயர்ந்துள்ளது.
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து 5-வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டின் முதல்நாளன்றே சிலிண்டர் விலை அதிகரிப்பு, ரயில் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.