தி.மு.க

”வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்க” - தி.மு.க. வலியுறுத்தல்!

தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்.

”வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்க” - தி.மு.க. வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

தீர்மானம் - 1

உயிர்தியாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி:

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக நின்று போராடி - “அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும்” என்ற பிரதமர் அறிவிப்பிற்குப் பின்னணியாக இருக்கும் உயிர் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இந்தக் கூட்டம் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்துகிறது.

தீர்மானம் - 2

குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவை தாக்கல் செய்க:

“குறைந்த பட்ச ஆதார விலையே இல்லாத” மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார் நம் கழகத் தலைவர். தொடர்ந்து எதிர்த்து - மாநிலத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அகில இந்திய அளவில் எதிர்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு துவக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே - அந்தச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி - 23.9.2020 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு - தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் அறிவித்து - நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் பங்கேற்று முழங்கினார் நம் கழகத் தலைவர் அவர்கள். அனைத்துக் கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து கூட்டம் போட்டு - இந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் - 5.12.2020 அன்று கருப்புக் கொடி ஏந்தி கழகத் தலைவர் அவர்களே போராட்டம் நடத்தினார்.

தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் 30.11.2020 அன்று கூட்டறிக்கை வெளியிட்டு - மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், 8.12.2020 அன்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அறிவித்து - அவ்வாறே போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து “மூன்று வேளாண் சட்டங்களையும் அரசை திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தது. 18.12.2020 அன்று கழகத் தலைவர் தலைமையில் அனைத்துக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் இருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.

பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட நிலையில் - தமிழ்நாட்டிலும் அப்படியொரு தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தி 1.1.2021 அன்று, அன்றைய தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் நம் கழகத் தலைவர். அனைத்து கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி - அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அச்சட்டங்களைத் திரும்ப பெறவில்லை என்பதால் - தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சராக - நம் கழகத் தலைவரே தீர்மானத்தை முன்மொழிந்து “மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக” என வலியுறுத்தும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதை இந்தக் கூட்டம் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டு கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜாகத்தையும் - கண் மூடித்தனமான அடக்குமுறைகளையும் - முள் வேலிகளையும் - தைரியமாக எதிர்த்து நின்று - இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்கட்சியாக இருந்த போதும் - ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது.

இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் அவர்களுக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி - இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது. அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தின் வருகின்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை - சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories