தி.மு.க

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

கொரோனா தொற்றுக்கு காரணம் தி.மு.கதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன்

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பச்சைப் பொய் சொன்ன ஜெயக்குமாருக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ப்ளாக் காமெடி எனப்படும் கொடூர தமாஷ் பேர்வழிகளாக மாறியிருக்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.

“கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு தி.மு.க.,தான் காரணம்” என்று பச்சைப் பொய்யை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து விட்டுள்ள “அதிகாரப்பூர்வமற்ற முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர்” அமைச்சர் ஜெயக்குமாருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் இப்படிப் பேசுவதற்குக் காரணம், தனிமைப்படுத்தலின் விளைவோ என்னவோ யாமறியேன்! ஆட்சியின் நாட்கள் குறையக் குறைய ஜெயக்குமாரின் “திருவாய்”, நாலாந்தரக் கருத்துக்களின் “கூவமாக” மாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சருக்கு உரிய எந்தத் தகுதியும் இல்லாதவரிடமிருந்து இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு ஓர் இலக்கணம் என்றால், அது அமைச்சரின் இன்றையப் பேட்டிதான் !

அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு, ஊடகங்களில் வெளியானதால் அதற்கு எதிர்க்கட்சியான தி.மு.கழகம் பொறுப்புடன் விளக்கமளிக்க வேண்டிய கடமை உள்ளது.

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் முதலமைச்சரிடமும் பதில் இல்லை; அமைச்சரிடமும் பதில் இல்லை. ஆனாலும், நோய்த் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படும் 'ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்' கையிருப்பு இல்லை என்பதை தனது கொடூர நகைச்சுவைப் பேட்டிக்கு நடுவிலும், மீண்டும் உறுதி செய்துள்ள அமைச்சருக்கு நன்றி!

நோயைக் கண்டுபிடிக்கவே உபகரணம் இல்லை. ஆனால் போர்க்கால நடவடிக்கையில் அரசு செயல்படுகிறது என்பது நல்ல வேடிக்கை மட்டுமல்ல; தமிழக மக்களின் உயிருடன் அ.தி.மு.க. அரசு எப்படி விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அது காட்டுகிறது.

முகக்கவசம், வென்டிலேட்டர், என்-95 மாஸ்க், பி.பி.இ. உபகரணங்கள் எல்லாம் கையிருப்பு இருக்கிறது என்றால், நேற்று பிரதமருடனான காணொலிக் காட்சியில் கூட, இவை எல்லாம் வாங்குவதற்கு நிதி கேட்டது ஏன்? உபகரணங்கள் இல்லை என்பதுதான் உண்மை. அதைத் திசைதிருப்ப அமைச்சர் இவ்வாறு உளறிக் கொட்டுகிறார். அதை தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை.

எங்கள் தலைவர் 16.3.2020 அன்று வண்ணாரப்பேட்டையில் போராடிய மக்களைப் பார்க்கப் போனதை உள்நோக்கத்துடன் குறை கூறுகிறார். உள்ளபடியே அமைச்சருக்கு நிதானம் இல்லை! கொரோனா பற்றிய அரசின் அறிவிப்பு வெளிவந்தவுடன் முதலில் கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் 16 எல்லையோர மாவட்டங்களில் ஒத்தி வைத்தவர் எங்கள் தலைவர். வண்ணாரப்பேட்டைக்குச் சென்று அங்கு போராடுபவர்களிடம், “கொரோனா நோய்த் தொற்றுள்ள நிலையில் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுங்கள்” என்று மார்ச் 16-ஆம் தேதியே வலியுறுத்தியவர் எங்கள் தலைவர்.

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாத நுனிப்புல் மேயும் திரு. ஜெயக்குமார், “கொரோனா தொற்றுக்கு தி.மு.க. காரணம்” என்று கூறுவது அபாண்டமானது மட்டுமல்ல;அநாகரிகமானது! அபத்தமானது!

“துண்டு” போட்டு பதவியைப் பிடிப்பதில் “நிபுணரான" திரு. ஜெயக்குமார் “கூவத்தூருக்கு”ப் பிறகு இப்போது முதலமைச்சரிடம் “துண்டு” போட்டு அமர்ந்துள்ளார். ஆகவே, பேட்டி என்ற பெயரில் தினமும் 'மைக்' முன்பு நின்று உளறிக் கொட்டி வருகிறார்.

நாடு முழுவதும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருந்த நேரத்தில் - குறிப்பாக கேரளாவில் அதிகரித்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு விழாக்களை நடத்தி - வாடகைக்கு அ.தி.மு.க.,வினரைக் கூட்டி வந்து வைத்துக் கூட்டம் போட்டது முதலமைச்சர்.

மார்ச் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் கொரோனா பற்றிப் பேசி விட்டு - 14-ஆம் தேதி திண்டுக்கல்லில் அரசு விழா நடத்தி அ.தி.மு.க.,வினரை வைத்துக் கூட்டம் போட்டது முதலமைச்சர். ஏன், நாடு முழுவதும் பிரதமர் 19-ஆம் தேதி அறிவித்து - 22-ஆம் தேதி சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட பிறகும் 24-ஆம் தேதிவரை இலட்சக்கணக்கான மாணவர்களை பிளஸ் டூ தேர்வு எழுத வைத்தது முதலமைச்சர்.

அமைச்சரின் இன்றைய பேட்டியின்படி தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுக்கு முழுமையான காரணம் முதலமைச்சரும், அ.தி.மு.க.,வும் என்று குற்றம் சாட்டலாமா?

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

நான் அப்படியெல்லாம் அமைச்சர் போல் அரைவேக்காட்டுத்தனமாகக் கேள்வி கேட்க விரும்பவில்லை!

கொரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே அதனை அறிவியல்பூர்வமாக அணுகி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மக்களிடம் வலியுறுத்தி வருபவர் எங்கள் தலைவர்.

ஆனால் அ.தி.மு.க. அரசு, அப்போதிருந்து இப்போதுவரை கொரோனா தடுப்பில் முழுமையான அக்கறை காட்டவில்லை. அ.தி.மு.க. அரசின் தோல்வியைத் திசைதிருப்ப அமைச்சர் திரு. ஜெயக்குமார் தி.மு.க. மீது பழி போடுவது அழகல்ல; அமைச்சரின் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற அசிங்கம் இது என்று கூறிட விழைகிறேன்.

“இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தால்தான் முறையாக இருக்கும்” என்று தத்துவம் பேசும் திரு.ஜெயக்குமார், அதே பேட்டியில் அதை மறுக்கும் விதமாக “ஏற்கனவே தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கே முன்னோடியாக மார்ச் 24 முதல் 31 வரை ஊரடங்கு பிறப்பித்தார்” என்று கூறியிருக்கிறார்.

இப்போது நீட்டிப்பதற்கு, இந்தியா முழுவதும் ஊரடங்கு எனக் காரணம் காட்டுவதன் மூலம், “முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க தயக்கம் காட்டுகிறார்” என்ற எங்கள் தலைவரின் குற்றச்சாட்டை அமைச்சரே வழி மொழிந்திருக்கிறார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் - நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மாநிலமெங்கும் முன்னணியில் நிற்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத திரு. ஜெயக்குமார், எங்கள் தலைவர் காணொலிக் காட்சி மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசியதைக் குறை கூறுவது கேவலமானது! அவர் மனதில் புரையோடிப் போயிருக்கின்ற அழுக்கை அது காட்டுகின்றது.

இன்று மக்கள் மத்தியில், அ.தி.மு.க.,வும் அதன் தலைமையிலான அரசும் கடுமையான விமர்சனத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளன. இந்தப் பேரிடர் காலத்திலும் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் பச்சை சந்தர்ப்பவாத நோக்கத்துடன் உள்ளடி அரசியலில்தான் அ.தி.மு.க. ஈடுபடுகிறது என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.

கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து, எங்கள் தலைவரும் நானும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது எடுத்துக் கூறியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் தந்தார். போதுமான அளவில் அது இல்லாவிட்டாலும், பொறுப்பை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்கள் நலன் கருதி நாங்கள் வரவேற்றுப் பாராட்டினோம். அதன்பிறகு, சில மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகளைக் கவனித்து, கொரோனா பரவல் பற்றிய புள்ளிவிவரங்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தத் தொடங்கினார்.

மக்களுக்கு உண்மை தெரியவருகிறது என்பதாலும், தன்னைவிட தனது அமைச்சரவை சகாவுக்கு ஊடக ஒளிபரப்புகள் மூலம் மக்களிடம் விளம்பரம் கிடைக்கிறது என்பதாலும் துறையின் அமைச்சரையே ஓரங்கட்டிவிட்டு, தனது விளம்பரத் தூதுவராக தலைமைச் செயலாளரை முதலமைச்சர் முன்னிறுத்தியிருப்பதை, ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி செய்திகளைக் கவனிக்கும் அனைத்து மக்களும் அறிந்துகொண்டு விட்டார்கள். இந்த நேரத்திலும் இப்படி ஒரு மோசமான அரசியல் கண்ணோட்டமா என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

“நாலாந்தரக் கருத்துகளின் கூவமாகி வருகிறது அமைச்சர் ஜெயக்குமாரின் திருவாய்” - துரைமுருகன் கண்டனம்!

கொரோனா மட்டுமல்ல; எந்தப் பேரிடர் வந்தாலும் மக்களின் பக்கம் நிற்பது தி.மு.க.,தான் - எங்கள் கழகத் தலைவர் மட்டும்தான்!

இன்றுகூட அண்டை மாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கும் எங்கள் தலைவர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கொரோனா தடுப்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் இதே போல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதுமட்டுமல்ல, சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, கட்சி நிதி வழங்கினார். கழகத்தின் அலுவலகங்களை கொரோனா நோய்த் தடுப்பு மையங்களுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கினார். கழக நிர்வாகிகளுடன் தினமும் மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யுங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

இன்றைக்கு தமிழக மக்களே, 'எதிர்கட்சித் தலைவர் செயல்படுகிறார். ஆளுங்கட்சித் தலைவரும் - அமைச்சர்களும் எங்கே?' என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்கள் பணியை தாங்கிக் கொள்ள இயலாத அமைச்சர் திரு. ஜெயக்குமார் - எங்கள் தலைவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் தவிப்பதே - அ.தி.மு.க. அரசின் தோல்வியைக் காட்டுகிறது.

நோய்த் தொற்றுக்குக் காரணம் தி.மு.க. என்று கூறும் அவரது மனநிலையில் ஏதோ பிரச்சினை இருக்கிறதே தவிர - தமிழக மக்களுக்கான பணி என்ற எங்கள் கழகத்தின் மார்க்கத்தில் எவ்விதப் பிழையும் இல்லை என்று தெரிவித்துக் கொண்டு - எங்கள் கட்சித் தலைவர் கூறியது போல் அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து தமிழக மக்களை இந்தக் கொடூர நோயிலிருந்து காப்பாற்றிட அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories