Tamilnadu

”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்புணர்ச்சியுடன் நடந்து கொண்டு வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர், குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இத்தீர்ப்பு குறித்து 14 கேள்விளை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சில கருத்துக்களை முன்வைத்துள்ளது.

அதில்,மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது.

காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும் அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும்.

அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு. அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் நான்காவது வாய்ப்பு கிடையாது.

வேறுபாடுகளை தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளுநரின் வேலை என்ன என்பதை இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது என கனிமொழி எம்.பி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” : மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!