murasoli thalayangam
“நிர்மலா சீதாராமன் அடிமனதில் எவ்வளவு வன்மம்” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
அடிமனதில் எவ்வளவு வன்மம் புரையோடிப் போயிருக்கிறது என்பதன் அடையாளம்தான் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் வாயில் இருந்து உதிர்த்த சொற்கள் ஆகும். அவர்கள் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘நீச பாஷைகள்’ ஆகும்.
“தமிழ்நாட்டில் 43 இலட்சம் பள்ளி மாணவ – மாணவியர் நலனுக்காகத் தர வேண்டிய இரண்டாயிரம் கோடியை ஏப்பம் விட்டுவிட்டீர்களே? எப்போது தருவீர்கள்?” என்று கேட்டால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாட்டு எம்.பி.க்களும் மக்களும் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகமற்றவர்கள்’ என்கிறார்.
முன்பு பெங்களூரில் தன்னை நோக்கிக் கேள்வி கேட்ட மாணவனை, ‘இந்த மாதிரி எல்லாம் சிங்கப்பூர்ல கேள்வி கேட்க முடியாது’ என்றும், தூத்துக்குடியில், ‘இனி யாரும் உண்டியல்ல காசு போடாதீங்க’ என்றும் சொல்லி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கக் கூடியவர் நிர்மலா சீதாராமன் என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள்.
இவர் நாடாளுமன்றத்தில் இதற்குத் தொடர்பு இல்லாத வகையில் தந்தை பெரியார் மீதான தனது வன்மத்தைக் கக்கி இருக்கிறார். ‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் படத்தை திராவிட இயக்கத்தவர் அனைவரும் தங்கள் அறையில் மாட்டி வைத்திருப்பது ஏன்?’ என்று கேட்கிறார்.
நிர்மலா சீதாராமன் பெரியாரை படிக்கத் தொடங்க வேண்டும். முன்னையும் பின்னையும் வெட்டி சங்கிகள் பரப்பும் ‘வாட்ஸ் அப்’ வதந்திகளாக இல்லாமல் முழுமையாகப் படியுங்கள் பெரியார் சொன்னதன் முழுப் பொருளை உணரலாம். ‘காட்டுமிராண்டித் தனமான ஆரியக் கொள்கைகள் தமிழை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதே’ என்ற ஆத்திரத்தில் தான் பெரியார் அப்படிச் சொன்னார். அறிவியல் தமிழாக அதனை வளர்க்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னார்.
“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்கு முக்கியக் காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ்மொழி சிக்கிக் கொண்டது தான். மதக் கொள்கையைப் பரப்ப வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாகத் தமிழ்நாட்டில் புகத் தொடங்கின. தமிழ் மன்னர்கள் ஆரிய மதத்தை ஏற்றுக்கொண்டதால் அம்மதக் கருத்துகளை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே, அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள ஆரம்பித்தனர்.
தமிழிலிருந்து ஆரியத்தை போக்கிவிட்டால் நம்மை அறியாமலே நமக்குப் பழந்தமிழ் கிடைத்து விடும். மதத்திற்கு ஆதாரமாய் இருந்து வருவனவெல்லாம் வடமொழி நூல்களே ஒழிய, தமிழ்மொழி நூல்களில் தற்சமயம் நம் நாட்டில் இருந்து வரும் மதத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென்பது இங்கு கவனிக்கத்தக்கது” (– மொழி எழுத்து நூல்) என்று எழுதி இருக்கிறார் பெரியார்.
“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழ் மரபில் – இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை. ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார் பெரியார்.
“ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி அடையாப் பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடு ஆகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும் பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிரத் தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பில்லை” (விடுதலை 1.12.1970) என்றார் பெரியார்.
தமிழ் மீது அவர் வைத்த பாசம்தான், அதன் வளர்ச்சிக்காக அப்படி அவரைப் பேச வைத்தது! “உண்மைத் திராவிடன் தீட்டிய ‘திருக்குறள்’ குப்பையிலே கிடக்க – திராவிடத் துரோகிகள் தீட்டிய நூல்கள் அதிகாரத்தில் இருந்து வருகின்றன” என்று பொங்கினார்.
“நாம் மிகப் பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்றுப் போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்? சொல்லுங்கள்! வெளிநாட்டுக்காரனைப் பார். வெள்ளைக்காரனைப் பாரய்யா!” என்று தனது இறுதிச் சொற்பொழிவில் கூட கெஞ்சியவர் தந்தை பெரியார்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏன் சொன்னார்?
‘அதனை காட்டுமிராண்டிக் காலத்தைப் போலவே வைத்திருக்காதே, வளர்ச்சிக்குரியதாக மாற்று’ என்று சொன்னார். புராணக் கதைகளை தமிழ்ப் படுத்திச் சொல்லிக் கொண்டிருக்காதே என்பதற்காகச் சொன்னார்.
இன்று இருந்திருந்தால் அப்படிச் சொல்லி இருப்பாரா? மாட்டார். ஏனென்றால் இன்று அனைத்தும் தமிழில் வந்துவிட்டது.
1950 காலக்கட்டத்தில் கம்பராமாயணம் – பெரியபுராணம் போன்றவையே தமிழாகப் பேசப்பட்டது. பரப்பப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் முதலமைச்சர் கலைஞர் ‘தமிழ்நாடு பாடநூல் வளர்ச்சிக் கழகம்’ மூலமாக அனைத்து அறிவியல் நூல்களையும் தமிழ்ப்படுத்தி வெளியிடத் தொடங்கினார். இயற்பியல், வேதியியல், கணிதவியல், மருத்துவம் அனைத்துக்கும் தமிழ்ச் சொற்களைச் சொல்லும் நூற்றுக்கணக்கான அகராதிகள் வந்துவிட்டன.
இன்று அறிவியல் தமிழாக, கணினித் தமிழாக, இணையத் தமிழாக, புலனத் தமிழாக – தமிழ் உயர்ந்துவிட்டது. ஊடகம் – தொழில் நுட்பம் வளர வளர தமிழ் அதற்காக சொற்களைத் தேர்வு செய்து புழக்கத்தில் விடுகிறது. இன்றைய தமிழ், பழந்தமிழாக மட்டுமே – ஆரியக் கருத்துக்களைச் சொல்லும் தமிழாக இல்லை. அறிவுப்பூர்வத் தமிழாக இருக்கிறது. இப்படி வளர வேண்டும் என்றே பெரியார் விரும்பினார்.
தமிழ் எழுத்துக்களைக் குறைக்கச் சொல்லி, எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தவர் பெரியார். அதுதான் இன்று கணினியில் தமிழை எளிமையாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது என்பதை நிர்மலா அறிவாரா?
தமிழை ‘நீஷ பாஷை’ என்று சொன்னது யார் என்று தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ‘குளித்த பிறகு நீச பாஷை காதில் விழக்கூடாது’ என்று சொன்னது யார் என்றும் தமிழ்நாடு அறியும். ‘உன் மொழியே இழிவானது’ என்பது இதன் பொருள்.
பெரியார் சொல்ல வந்தது, தமிழை அறிவுமொழியாக, அறிவியல் மொழியாக, பயன்பாட்டு மொழியாக மாற்று என்பதுதான். அசிங்கப்படுத்தச் சொன்னதற்கும் – அக்கறையோடு சொல்வதற்கும் வேறுபாடு உணர்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!