India

பெங்களூரு டு ஒடிசா.. 1300 கி.மீ நடந்தே சென்ற 3 தொழிலாளர்.. சம்பளம் கொடுக்காத முதலாளிக்கு வலை !

ஒடிசா மாநிலம் காலஹண்டியின் ஜெயபாட்னா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தரகர் ஒருவர் மூலமாக அதிக சம்பளம் தருகிறோம் என பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பிரிக்கப்பட்டு 3 தொழிலாளிகள் மட்டும் ஒரு கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால்,அங்கு முதலில் வாரத்துக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பவம் தரப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாரம் 200 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் சம்பளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு வெறும் உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு அதிக வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் முதலாளி அவர்களை அடித்து கொடுமையும் படுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்து வெளியேறி தங்கள் சொந்தஊருக்கு செல்ல அந்த 3 தொழிலாளிகளும் முடிவு செய்துள்ளனர். ஆனால் கையில் பணம் இல்லாத நிலையில் நடந்தே தங்கள் ஊருக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.

அதன்படி 1,300 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தங்கள் சொந்த கிராமத்துக்கு நடந்தே சென்றுள்ளனர். மார்ச் 26-ம் தேதி பெங்களூருவில் இருந்து நடக்கத் தொடங்கிய அவர்கள் ஒரு வாரம் முழுவதும் நடந்து கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தங்கள் கிராமத்தை அடைந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர்களுக்கு மேல் அவர்கள் நடந்துள்ளனர்.

இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவ்ர்களிடம் பல்வேறு செய்தி நிறுவனங்களும் சந்தித்து பேட்டியெடுத்தனர். ஆனால் போதிய படிப்பறிவு இல்லாததால் எங்கு வேலை செய்தோம் என்றோ, அவர்களின் முதலாளி மற்றும் தரகர் யார் என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலை இருந்துள்ளது.

மேலும், சாலையில் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்ததாகவும், ஆனாலும் பெரும்பாலும் நடந்தே சொந்த கிராமத்துக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இவ்ர்களை ஏமாற்றிய முதலாளி குறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

.

Also Read: பங்காளி MI-யை வீழ்த்தி டாப்-4க்கு முன்னேறிய CSK.. தொடர் தோல்வியால் சிக்கலில் மும்பை இந்தியன்ஸ் !