India

பஞ்சாபில் அரங்கேறிய Honey Trap.. தொழிலதிபரை மிரட்டிய Insta பிரபலம் சுற்றிவளைத்து கைது..BMW கார் பறிமுதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பணம்படைத்தவர்களை குறி வைத்து தனது அந்தரங்க வலையில் சிக்க வைத்து வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கேரளத்திலும் இதுபோன்ற ஒரு பெண் பணக்காரர்களை குறிவைத்து மிரட்டி பணம்பறித்த சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தொழிலதிபரை ஹனி ட்ராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜஸ்னீத் கவுர் என்ற ராஜ்வீர் கவுர் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றிவந்தார். இன்ஸ்டாகிராமில் இவரை 2 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

இவர் குர்பீர் சிங் என்ற தொழிலதிபரை தொடர்புகொண்டு ஜஸ்னீத் கவுர் அவருடன் நெருக்கமாக பேசியுள்ளார். பின்னர் அதனை காட்டி அவரிடம் பணம் தருமாறு மிரட்டி வந்துள்ளார். குர்பீர் சிங்கிடம் 2 கோடி ரூபாய் தராவிட்டால் இந்த உரையாடலை பொதுவெளியில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி முதற்கட்டமாக 1 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார்.

அதோடு தனக்கு நெருக்கமான குண்டர்கள் மூலமும் குர்பீர் சிங்கை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதன் காரணமாக குர்பீர் சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி பணம் தருவதாக குர்பீர் சிங் மூலம் ஜஸ்னீத் கவுரை வரவழைத்த போலிஸார் அவரை மடக்கி கைது செய்தனர். மேலும் அவரோடு இருந்த சோகன்பால் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இது தவிர இந்த விவகாரத்தில் ஈடுபட ஜஸ்னீத் கவுரின் கூட்டாளியும், முக்கிய அரசிய பிரமுகருமான லக்கி சந்து என்பவரையும் போலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பிஎம்டபிள்யூ கார் மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டில், மொஹாலியில் இதே போன்ற குற்றச்சாட்டில் ஜஸ்னீத் கவுர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Also Read: “தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !