
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக இருந்த திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் எவ்வித நிதிப் பற்றாக்குறையும் இன்றி, உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக, ஆதிதிராவிடர் நலத்துறையினால் ‘அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்’ வடிவமைக்கப்பட்டுத் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்குப் படிப்புக் கட்டணம், விமானப் பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.36 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த நிதி உதவி, தி.மு.க ஆட்சியில் தடையின்றி வழங்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு நனவாகி வந்தது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை மலேசியாவில் பயிலும் மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன் என்பவர், காணொளியாக வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர், சமூகநீதித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை எனவும் அக்காணொளியில் பாரதிதாசன் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகையை வழங்காமல், அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது த.வெ.க. அரசு.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காக, இதையும் திட்டமிட்டு மறைமுகமாக செயலிழக்கச் செய்து நிறுத்துவதுதான் இந்த அரசின் நோக்கமா?

உடனடியாக நிலுவையிலுள்ள உதவித்தொகையை விடுவித்து, மாணவர்களின் கல்வியைத் தடையின்றி தொடரச் செய்ய வேண்டும்” என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, UK Visas and Immigration விதிமுறை மாற்றங்களால் தமிழ்நாடு அரசின் நிதியுதவி ஏற்கப்படாத நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2025–26ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்திட வேண்டும் என்றும்;
மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்க, இங்கிலாந்து அரசுடன் உடனடியாக பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.






