India

அதிகாலையிலேயே நடந்த கோர விபத்து.. அரசு பேருந்து டயர் வெடித்து ஒருவர் பலி.. கேரளாவில் அதிர்ச்சி !

கேரளா மாநிலம் மூணாறில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் அங்கிருக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது நேரியமங்கலம் பகுதியின் அருகே உள்ள ஹேர்பின் வளைவில் அந்த பேருந்தின் டயர் வெடித்தது. இதில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

அந்த வழியே போன பொதுமக்கள் பேருந்து உருண்டு விழுந்ததை கண்டவுடனே காவல்துறைக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயணைப்புத்துறை உதவியோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் அடிமாலி என்ற பகுதியை சேர்ந்த சஜீவ் என்றும், வயது 52 என்றும் தெரிய வந்தது. காலையிலேயே நடத்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விற்பனைக்கு வரும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக்”: விலையை கேட்டால் தலைச்சுற்றும் - எவ்வளவு தெரியுமா?