India

“இந்தியாவில் 2 நாளில் 12 ஆயிரம் பேர் பாதிப்பு - 11 நாட்களில் 1,427 பேர் பலி” : அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்டது.

ஊகானிலிருந்து திரும்பிய மாணவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக பல மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா பரவியது. மார்ச் 16 ஆம் தேதி நூறு பேருக்கும், மார்ச் 30 ஆம் தேதி ஆயிரம் பேருக்குமாக உயர்ந்தது.

தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 137 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து கடந்த 11 நாட்களாக உயிரிழப்பு நூற்றுக்கு மேல் பதிவாகிவருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் (48%) குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7128 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பது மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வியைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் அரசின் நிவாரணமும் மக்களுக்கு சென்றடையாத நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது நாட்டு மக்களை கவலையடைய செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Also Read: இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கை 98 ஆனது! #CoronaUpdates