
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று குற்றஞ்சாட்டியதுடன், இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தார்.
இதனால், இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அந்நாட்டின் ரோஸ்நெஃப்ட், லூக்காயில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் கச்சா எண்ணெய் கொள்முதல் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.






