இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
மேலும் காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கி அதன் பல்வேறு பகுதிகளை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சிகளை எடுத்துவந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த 20 பரிந்துரைகளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு தரப்பும் ஏற்றது. இந்த அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகவுள்ளது. இதனிடையே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கைதிகளை இரு தரப்பும் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளன. '
ஆனால், முக்கிய பாலஸ்தீன தலைவரான மர்வான் பர்ஹாட்டியை விடுதலை செய்ய இஸ்ரேல் மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களின் முக்கிய தலைவரான மர்வான் பர்ஹாட்டி அந்த நாட்டின் அடுத்தகட்ட தலைவரான கருதப்பட்டார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் சிறையில் அடைபட்டுள்ள அவரை இஸ்ரேல் விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.