அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் பகுதியில் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆசிரியர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலிஸார் கைது செய்தபோது மாணவனிடம் துப்பாக்கி இருந்துள்ளது.
இதையடுத்து உயிரிழந்த மாணவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் விவரங்களை போலிஸாரும், பள்ளி நிர்வாகமும் வெளியிடவில்லை. அப்பள்ளியின் கண்காணிப்பாளர் டிம் த்ரோன், 'இந்தச் சம்பவம் பேரழிவை ஏற்படுத்துகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனமும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்து சூப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இப்படியான கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் துப்பாக்கி கலாச்சாரம் அமெரிக்காவில் அதிகரித்து விட்டதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.