உலகம்

கொக்கெயின் கடத்தலுக்கு உதவிய அமெரிக்க ராணுவம்... கடத்தல் மன்னன் பேப்லோ எஸ்கோபார் கொலையின் பின்னணி என்ன?

அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வரப்படும் போதை மருந்துகளை தடுப்பதாக சொல்லி பிற நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ வீரர்களின் வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் போதை மருந்து வந்து கொண்டிருந்தது.

கொக்கெயின் கடத்தலுக்கு உதவிய அமெரிக்க ராணுவம்... கடத்தல் மன்னன் பேப்லோ எஸ்கோபார் கொலையின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

கொலம்பியா நாட்டின் மெடல்லின் பகுதியில் ஒரு அதிரடி காட்சி அரங்கேறியது. வீட்டிலிருந்து தப்பியோட ஜன்னல் வழியாக வெளியேறி பக்கத்து வீட்டுக் கூரை மீது ஓடிக் கொண்டிருந்தார் ஒருவர். அவரை வீழ்த்திவிட வேண்டுமென்ற வேகத்தில் காவலர்கள் சுட்டுக் கொண்டிருந்தனர். சரமாரியாக தோட்டாக்கள் பாய்ந்து கொண்டிருந்தன, தோட்டாக்களுக்கும் ஓடிக் கொண்டிருந்தவருக்கும் இடையே நடந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் தோட்டாக்கள் ஜெயித்தன. தப்ப முயன்றவர் ரத்தத்தில் தோய்ந்துபோய் கூரையின் மீது கிடந்தார். உலக நினைவில் முக்கிய காட்சியாக அது பதிந்தது. அந்த நபரின் பெயர் பேப்லோ எஸ்கோபார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த போதை மருந்து கடத்தல் மன்னன்.

எஸ்கோபாரின் வணிகம் பிரதானமாக கொக்கெயினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கொக்கெயின் என்பது போதைப் பொருள். கொக்கெ என்கிற செடியில் விளையும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் போதைப் பொருள். இதுபோன்ற போதைப் பொருட்களுக்கான தேவை 1960களில் தொடங்கி 1970களில் அதிகரித்துக் கொண்டிருந்தது. போதை மருந்துக்கான தேவையை அதிகரித்ததில் முக்கியமான பங்கை பேப்லோ எஸ்கோபார் வகித்தான். உலகிலேயே அதிகமான கொக்கெயின் உற்பத்தி செய்யப்படுவது கொலம்பிய நாட்டில்தான். உலகிலேயே அதிகமாக கொக்கெயின் பயன்படுத்தப்படுவது அமெரிக்க நாட்டில்தான். உலகின் பெரும்பான்மையான நாடுகளில் கொக்கெயின் பயன்பாடு சட்டவிரோதம். பயன்படுத்தவும் கூடாது. வைத்திருக்கவும் கூடாது. சட்டவிரோதம் என்பதாலேயே கொக்கெயினுக்கான மதிப்பு அதிகமாக இருந்தது.

கொக்கெயின் முதலிய போதை மருந்தை தடுக்கவென அமெரிக்கா ஒரு திட்டம் வகுத்திருந்தது. ஆனாலும் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு கொக்கெயின் கிடைத்துக் கொண்டிருந்தது. எப்படி தெரியுமா?

கொக்கெயின் கடத்தலுக்கு உதவிய அமெரிக்க ராணுவம்... கடத்தல் மன்னன் பேப்லோ எஸ்கோபார் கொலையின் பின்னணி என்ன?

1971ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் War on Drugs என்கிற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். போதைப் பொருட்கள் மீதான போர் என அர்த்தம். அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்கவென உருவாக்கப்பட்ட திட்டம் அது. அமெரிக்காவுக்குள் கடத்திக்கொண்டு போதை மருந்துகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தங்கள் போட்டு, போதை மருந்து கடத்தலை தடுக்கவும் குறிப்பிட்ட நாடுகளில் போதை மருந்துகளை அழித்தொழிக்க தேவையான உதவிகளை செய்யவும் என உருவாக்கப்பட்டத் திட்டம். குறைந்தபட்சம் அத்திட்டத்துக்கான விளக்கம் அப்படித்தான் சொல்லப்பட்டது.

போதை மருந்து தடுப்புத் திட்டத்தின் கீழ் வெவ்வேறு நாடுகளுக்கு தன் ராணுவத்தை அனுப்பியது அமெரிக்கா. அந்தந்த நாடுகளுக்கு தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் கொடுத்துதவியது. ராணுவத்துக்கான நிதி உதவியென அமெரிக்க மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் கொலம்பியாவுக்குள் கொட்டப்பட்டது. மேலும் கொலம்பிய வீரர்களுக்கான ராணுவப் பயிற்சியையும் அளித்தது. அமெரிக்க ராணுவத்தால் கொலம்பியாவில் பல படுகொலைகளும் கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன.

போதை மருந்துகளின் மீதான போர் என்கிற பெயரில் கொலம்பியாவுக்கு வந்த நிதி எங்கு சென்றது தெரியுமா?

எஸ்கோபாருக்கு!

ராணுவ வீரர்களை போதையில் வைத்திருப்பதற்காக கொலம்பியாவில் அமெரிக்காவுக்கு போதை மருந்து தேவைப்பட்டது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான போதை மருந்துகளை நேரடியாக இல்லாமல் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தது பேப்லோ எஸ்கோபார்தான். சரியாகச் சொல்வதெனில், அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வரப்படும் போதை மருந்துகளை தடுப்பதாக சொல்லி பிற நாடுகளுக்கு அமெரிக்கா அனுப்பிய ராணுவ வீரர்களின் வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் போதை மருந்து வந்து கொண்டிருந்தது.

கொக்கெயின் கடத்தலுக்கு உதவிய அமெரிக்க ராணுவம்... கடத்தல் மன்னன் பேப்லோ எஸ்கோபார் கொலையின் பின்னணி என்ன?

‘போதை மருந்துகளுக்கு எதிரான போர்’ எனத் தொடங்கப்பட்ட திட்டத்துக்கென திரட்டப்பட்ட நிதியை வைத்து அமெரிக்க அரசு, அண்டை நாடுகளில் உருவாகும் கம்யூனிசப் போராட்டங்களை ஒடுக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது. அதற்காகவென அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை போதையில் வைக்க அமெரிக்கா விரும்பியது.

அமெரிக்காவுக்கு போதை மருந்துகள் கடத்தல், எக்கச்சக்கமான பணம், அரசின் ஆதரவு, அதிகாரிகளுக்கு லஞ்சம், கொலைகள் உட்பட ஏகப்பட்ட குற்றங்கள் எனச் சீரும் சிறப்புமாகச் சென்று கொண்டிருந்த எஸ்கோபாரின் புகழ் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.

கொலை செய்வது அவனுக்கு புதிதில்லை. பணம் பறிப்பதும் அவனுக்கு புதிதில்லை. ஆனால் முதன்முறையாக அரசியல் என்கிற விஷயம் எஸ்கோபாரின் வாழ்வின் எதிர்ப்பட்டது. அதுவும் அமெரிக்க அரசியல்!

அமெரிக்காவின் இரட்டை வேஷத்தை ஏதோவொரு வகையில் பயன்படுத்தத் தொடங்கி லாபமடைந்தவனே பேப்லோ எஸ்கோபார். தன் சுயநலத்துக்கு வளர்த்து விட்ட ஒருவனை இறுதியில் பலி கொடுப்பதே அமெரிக்க அரசியலின் பாணி. எனவே கொலம்பிய காவலர்களுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் ஒரு நல்ல நாளில் ‘நாங்கள் போதை மருந்துக்கு எதிரானவர்களே’ எனக் காட்ட பேப்லோ எஸ்கோபாரை போட்டுத் தள்ளியது.

‘போதை மருந்துகளுக்கு எதிரான போர்’ என தொடங்கப்பட்ட திட்டம் தன் நோக்கத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக அமெரிக்க மனிதை உரிமைக் குழு 2011ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில்தான் மேற்சொன்ன மொத்தப் புள்ளிகளும் இணைக்கப்பட்டன.

புள்ளிகள் இணைக்கப்பட்டதும் புலப்பட்டது அமெரிக்காவின் அவலட்சணமான முகம், மீண்டுமொருமுறை!

banner

Related Stories

Related Stories