
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மஞ்சகாரணையில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவால் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவையில் அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அமைச்சர் பர்வேஸை விளக்கம் அளிக்க அனுமதித்தார்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள், "நாங்கள் பேச அனுமதிக்க வேண்டும்" என வலியுறுத்தின.
இதற்கு சபாநாயகர், "உங்களுக்கான நேரத்தில் நீங்கள் இந்த விவகாரம் குறித்துப் பேசுங்கள்" எனத் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்.
பிறகு அமைச்சரின் விளக்கத்தை அடுத்து மீண்டும் பேச வாய்ப்புக் கேட்டனர். அப்போது, 110 விதியின் கீழ் அமைச்சர் விளக்கம் கொடுத்த பிறகு மற்றவர்கள் பேசுவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைச் சபாநாயகர் மறுத்துவிட்டார்.
முதலில் அனுமதி கொடுக்கிறேன் எனக் கூறிவிட்டு, பிறகு அனுமதி மறுத்து நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






