முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை உச்சத்தை எட்டியதால் இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இதனால் அ.தி.மு.க இரண்டாக உடைந்து இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி என்று செயல்பட்டு வருகிறது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஒ.பி.எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் "பிக் பாக்கெட்" அடிப்பது போல் உள்ளது. அ.தி.மு.கவை அழிக்கும் நாசகார சக்தியாக பழனிசாமி உள்ளார் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள அரவது வீட்டிற்குச் சென்றார். அப்போது சி.விஜயபாஸ்கர் நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்களுடன் தர்பூசணி, தேங்காய், மாங்காய் உள்ளிட்ட 30 வகையான பழங்கள் மற்றும் ஆடு, மாடு கோழி என தடபுடலாக்கச் சீர்வரிசை எடுத்துச் சென்று எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.
அப்போது சில தொண்டர்கள் குழந்தைகள் விளையாடும் டெடி பியர் பொம்மையையும் சீர்வரிசையுடன் சேர்த்து எடுத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர். தொண்டர்கள் டெடி பியர் பொம்மை எடுத்து வந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் எடப்பாடி பழனிசாமி என்ன குழந்தையா அவருக்குப் பொம்மை எல்லாம் எடுத்து வந்திருக்கிறார்கள் என கேலிக் கிண்டல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.