தமிழ்நாடு

VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!

த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் + இதர கட்சிகள் இது த.வெ.க அரசின் முடிவு என முட்டக் கொடுப்பார்களா?

VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்?  : தி.மு.க ஐடி விங் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறேன் என VB-G RAM G திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புற வாழ்வாதாரத்தையை ஒன்றிய பா.ஜ.க அரசு சிதைக்கிறது. மேலும் மகாத்மா காந்தியின் பெயரையும் மாற்றியுள்ளது மோடி அரசு.

இந்தியாவின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒருவரான மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது, பா.ஜ.க அரசின் தனிப்பட்ட அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியே என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும்,இத்திட்டத்திற்கான நிதிப் பகிர்வு 60:40 (மத்திய அரசு 60%, மாநில அரசு 40%) என மாற்றப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று முதல் VB-G RAM G திட்டம் அமலாகிறது.

இந்நிலையில், VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? என தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

அதில், ”மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக ‘வி பி ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோது, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மாண்புமிகு பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு, அதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியது தி.மு.கழகம். அன்று தி.மு.கழக கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதனை எதிர்த்தது.

ஆனால் இன்று எந்த எதிர்ப்பும் இன்றி, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் த.வெ.க அரசு - ‘உத்தரவு எசமான்’ என நாளை முதல் தமிழ்நாட்டில் ‘வி பி ஜி ராம் ஜி’ அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில், வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல் ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலையும், உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கும், இதனை நம்பியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கும் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என முதலமைச்சர் விஜய் அறிவாரா?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் கஜானா காலியாக இருக்கு என பேசிய விஜய் இப்போது எந்த கஜானாவில் இருந்து இதற்கு செலவழிக்கப் போகிறார்? ஆட்சிக்கு வந்த உடனே பா.ஜ.க.வின் உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த துடிப்பது ஏன்?

இப்போது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் + இதர கட்சிகள் இது த.வெ.க அரசின் முடிவு என முட்டக் கொடுப்பார்களா? இல்லை கொள்கை நிலைப்பாடு எடுத்து இதனை எதிர்ப்பார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories