
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவிக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்ததால், அவர் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி அடிக்கடி முத்துக்குமாரின் வீட்டிற்கு விளையாடச் செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 19ஆம் தேதி சிறுமி முத்துக்குமார் வீட்டிற்கு விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது முத்துக்குமார் அச்சிறுமிக்கு உணவு சமைத்துக் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் பயந்துபோன சிறுமி, அவரிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றுள்ளார். சிறுமியின் தாய் இது குறித்து விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கோவை இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இப்புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் முத்துக்குமாரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.
கோவையில் சமீபத்தில் 10 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட இச்சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






