
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு வருமானவரித்துறையை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தற்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் தனது மிரட்டல் கருவியை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்ததை இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் நிலையில், தனது தேர்தல் பரப்புரையை முடக்கும் வகையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நீதி, நியாயம் மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் காப்பதற்கும் நாம் கொண்டுள்ள கடமையிலிருந்து எந்தவொரு மிரட்டலும் எங்களைத் தடுத்துவிட முடியாது என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வரும் சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.






