
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பூர்ணிமாவை ஆதரித்துத் திரைப்பட நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய நடிகர் சத்யராஜ்,"தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து பா.ஜ.க-வை தோற்கடித்துள்ளார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இதனால் ஒன்றிய அரசு ஆடிப்போயுள்ளது. நாம் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம், தலைகுனியவும் மாட்டோம். ஒன்றிய அரசிற்கு யாரேனும் அடிபணிந்து தலைகுனிந்தால், அப்படிப்பட்ட அமைதிப்படை அமாவாசைகளை ஒதுக்கிவிட வேண்டும்.
அதி உன்னதமான தலைவன் ஆரம்பித்த அ.தி.மு.கவை, தைரியமான ஜெயலலிதா வளர்த்தெடுத்தார். ஆனால், காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்; ஜெயலலிதா ஓ.பி.எஸ்-ஸைத்தான் முதலமைச்சராக்கி இருப்பார்.
பா.ஜ.க. மதச் சண்டையை உருவாக்கித் தமிழ்நாட்டில் குளிர்காய நினைத்துக் கொண்டிருக்கிறது. எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அப்படிச் செய்யலாம், தமிழ்நாட்டில் அப்படிச் செய்ய முடியாது.
கரூர் துயரத்தில் விஜய் முதலமைச்சரையும் தி.மு.க-வையும் குற்றம் சொல்லிய நிலையில், சட்டமன்றத்தில் அவருக்கு ஆதரவாக பேசியவர் நமது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகவே பேசினார். விஜய் கொள்கைத் தலைவர்களாகப் பெரியாரையும் அம்பேத்கரையும் கூறுகிறீர்கள்; அதை உங்களது தொண்டர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். யார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் 'எம்.ஜி.ஆர்' எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சினிமாவில் நாம் நடித்துள்ளதைப் பார்த்து மக்கள் நம் மீது அன்பாக உள்ளனர். சினிமா துறையில் ஒப்பிடும்போது என்னைவிட விஜய் உயர்ந்த இடத்தில் உள்ளார். விஜய்யை எனக்கும் பிடிக்கும்; அவரது திரைப்படத்தை நானும் திரையரங்கில் குடும்பத்துடன் பார்ப்பேன். சினிமாவில் விஜய் நன்றாக நடிக்கிறார், நடனமாடுகிறார் என்றால், நாம் அவரைச் சினிமாவிலேயே வைத்திருப்பது நல்லது. விஜய் ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார். நம்முடைய முதலமைச்சரைப் போல் ஒன்றிய அரசை எதிர்த்துச் சண்டை செய்ய முடியுமா? ஒன்றிய அரசிடலிருந்து ஒரு சத்தம் வந்தாலே விஜய் ஓடி ஒளிந்து கொள்வார். அதை எதிர்ப்பதற்கான ஆளுமை வேண்டும்; அவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்” என தெரிவித்துள்ளார்.






