
முரசொலி தலையங்கம் (13-08-2026)
நிதி அமைச்சரின் ஆணவம்!
நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரியவில்சன், வாசிப்பில் மட்டுமல்ல, பொருட்பிழை ஏற்படும் வகையில் தான் தனது அறிக்கையை வாசித்தார். உச்சரிப்பில் தவறுகள் இருப்பது இயல்பு தான். நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் எண்களைக் கூடச் சரியாகச் சொல்லவில்லை. இது பற்றி இணையத் தளங்களில் கடுமையான விமர்சனங்கள் அவர் மீது விழுந்து வருகின்றன. இது சட்டமன்றத்திலும் விவாதப் பொருள் ஆனது. இது தவறான விவாதம் ஆகாது.
முன்பு கூட இது போன்ற விவாதங்கள் நடந்துள்ளது. முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்த போது ஒரு உறுப்பினர், ‘எனது தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கு மாறாக, ‘எனது தொகுதியை எடுத்துக் கொல்லுங்கள்’ என்று சொன்னார். ‘நீங்களே உங்கள் தொகுதி யைக் கொல்லக் கூடாது’ என்றார் முதலமைச்சர் கலைஞர். அவையினர் அனைவரும் சிரித்தார்கள். அது போலத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய இயல்பு நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இல்லை. இணையத்தில் விமர்சிப்பதற்கும் சேர்த்து சபையில் பதில் சொன்னார்.
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் தி.மு.ராசேந்திரன், மிகத் தன்மையாகத் தான் தனது கருத்தைச் சொன்னார்.
‘’மாண்புமிகு நிதி அமைச்சர், தென்கோடி முனையில் எங்களது குமரி முனையின் மாப்பிள்ளை என்ற முறையில் அவருக்கு எனது மதிப்பை பதிவு செய்கின்றேன். ஆனால் அவர் தனது பட்ஜெட்டை வாசிக்கிற போது, அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு மிக நேர்த்தியாக இருந்தது. தமிழில் பல சொற்றொடர் களை அவர்கள் பேசாமல் விட்டுவிட்டார்கள். சில சொற்றொடர்கள் இலக்கணப் பிழையாக அமைந்தது. இதைக் குறையாகவோ குற்றச்சாட்டாகவோ இந்த அவையில் வைக்க விரும்பவில்லை. வருங்காலத்தில் பிழையின்றி பட்ஜெட் வாசிக்க வாய்ப்பு ஏற்பட வேண்டும். பணிவோடு நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தான் உறுப்பினர் தி.மு.ராசேந்திரன் சொன்னார். இதில் ஒரு சொல் கூட தரக்குறைவானதாக இல்லை.
இதைக் கேட்டதும் ஒரு சிரிப்புடன் கடந்து போயிருக்கலாம். மாறாக, ஆத்திரம் கொண்டவராகப் பேசி இருக்கிறார் நிதி அமைச்சர். அதில் ஆணவம் மட்டுமே இருந்தது.
“எனக்கு என்னுடைய கிறிஸ்தவம் ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்புமொழி, பண்புமொழி. இரக்கத்தின் மொழி. இது பாதிப் பேருக்கு எத்தனை தமிழ் படித்தாலும் புரியாது” என்று சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் மரியவில்சன்.

‘ஆங்கிலம் படித்தவன் நான்’ என்ற மேட்டிமை தான் இதில் இருக்கிறது. ‘தமிழ் படித்தால் புரியாது’ என்ற ஏளனம் தான் இதில் இருக்கிறது.
இவர் தவறாகத் தமிழ் பேசுவதற்கும், தப்புத் தப்பாக எண்களைச் சொல்வதற்கும் கிறிஸ்துவத்துக்கும் என்ன தொடர்பு? நல்ல தமிழை வளர்த்ததில் கிறிஸ்துவ மதத்துக்கும் தொடர்பு உண்டு. வெளிநாடுகளில் இருந்து சமயப் பரப்புரைக்கு வந்த பாதிரியார்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டு மலையளவு. தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கும் அளவுக்கு தமிழ்ப்பாதிரியார்கள் தொண்டாற்றி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் தேவாலயங்களில் அழகான தமிழில், கனிவான குரலில், அழுத்தமாகப் பேசும் எத்தனையோ பாதிரியார்களைப் பார்க்கிறோம். இது எதையும் அறியாதவராக இருக்கிறார் அமைச்சர் மரிய வில்சன்.
தனது தவறான தமிழுக்கு கிறிஸ்தவத்தின் மீது பழிபோடும் பாவத்தையும் சேர்த்துச் செய்துள்ளார் மரியவில்சன். இப்படித்தான் பேசுவேன், இது என்னுடைய ஸ்டைல் என்பது எல்லாம் சபை மாண்பை மதிக்காத போக்கு ஆகும்.
‘இதெல்லாம் எத்தனை தமிழ் படித்தாலும் தெரியாது’ என்கிறார் மரியவில்சன். மதத்தையும் மொழியையும் எதற்காக ஒப்பிட வேண்டும்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தின் பின்னால் எதற்காக ஒளிந்து கொள்ள வேண்டும்? ஒழுங்கான தமிழைப் படிக்கப் படிக்கத்தான் ஒவ்வொன்றும் ஒழுங்காகவே தெரியும்.
இங்கே பிரச்சினை என்பது அவர் பேசும் மொழியில் இல்லை. மதத்தில் இல்லை. மரிய வில்சனிடம் தான் பிரச்சினை இருக்கிறது. கிறிஸ்தவத்தில் இருந்து அன்பையோ, பண்பையோ அவர் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் அவரது பேச்சு எடுத்துக் காட்டுகிறது.
இவருக்கு அன்பு மொழியோ, பண்பு மொழியோ, இரக்க மொழியோ தெரியாது என்பதற்கு அவர் உருட்டுக் கட்டையைத் தூக்கிக் கொண்டு சொந்தக் குடும்பத்தினரைத் தாக்கும் காட்சிகளே சாட்சி.
நிதி அமைச்சரான இவர், கட்டையைத் தூக்கி ஒரு குடும்பத்தைத் தாக்கும் வீடியோ இணையத் தளத்தில் பரவி அனைவரும் பார்த்த காட்சிகள் ஆகும். மரிய வில்சனுக்கும் அவரது அண்ணன் மரிய குளோத்துக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்துள்ளது. 8.8.2022 ஆம் நாள் புதுச்சேரியில் உள்ள மரிய குளோத்தின் வீட்டுக்கு சென்று அவரையும் அவரது மனைவியையும் கட்டையை வைத்து தாக்கி இருக்கிறார் மரிய வில்சன். கதறக் கதற தாக்கி இருக்கிறார். வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. மரிய வில்சன், அவரது அப்பா நெஸ்தோஸ் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார் நிதி அமைச்சர். அதனைத் தான் அவர் அவைக்குள்ளும் காட்டுகிறார்.
சினிமாவில் நடிக்கும் போது விஜய்யாக இருந்தவர், கட்சி ஆரம்பித்ததும் ‘ஜோசப் விஜய்’யாக அடையாளம் காட்டிக் கொண்டதைப் போல, தனது மத அடையாளத்தைக் காட்டி கழிவிரக்கம் தேடப் பார்க்கிறார் மரியவில்சன்.
இவருக்கு தமிழும் தெரியவில்லை. கிறிஸ்தவமும் தெரியவில்லை. சபை மாண்பும் தெரியவில்லை. பொது நாகரிகமும் தெரியவில்லை.






