
தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய பாஜக அரசு, தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பாதிப்படைய முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொகுதி மறுவரையறை திட்டத்தை நிறைவேற்ற நேற்று (ஏப்ரல் 16) ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியது.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிப்படையாது என்று பாஜகவினர் கூறி வந்தாலும், வட மாநிலங்களின் பிரதிநித்துவம் கூடுவதே, தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டின் முதல் குரல் எழுந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கருப்புக்கொடி போராட்டம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
அதோடு தொகுதி மறுவரையறை மசோதாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்திலும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தொகுதி மறுவரையறை செய்வதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை 7 மணிக்கு மேல் நடைபெற்றது.

இதில் 3-ல் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது. மொத்தம் பதிவான 489 வாக்குகளில், மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின. இதனால் மசோதா தோல்வியடைந்தது.
அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவும், யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாவும் திரும்பப்பெற்றது ஒன்றிய பாஜக அரசு. இந்த வெற்றி தென் மாநிலங்களின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி என்று மக்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.






