
தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்ற தி.மு.க குழுத்தலைவர் கனிமொழி மக்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது வருமாறு:-
தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டியது ஏன்?.2023-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவித்த பிறகு எதற்கு புதிய மசோதா ?
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளது. தொகுதி மறுவரையறை அரசியல் சட்டத்திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமானது, இதன்மூலம் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டால், அவர்களுக்கு பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது. தொகுதி மறுவரையறை தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்றால் எங்கு சென்று முறையிடுவது? தேர்தல் லாபத்திற்காகவே இந்த மசோதாவை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது.
பெண்களை கேடயமாக வைத்து, தனது திட்டத்தை மோடி அரசு செயல்படுத்த முயற்சிக்கிறது. மாநிலங்களின் உரிமையை ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்போதும் மதிப்பதில்லை தற்போதைய 543 மக்களவை தொகுதிகள் அடிப்படையில் அமல்படுத்தவேண்டும்உடனடியாக 33% மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், மசோதாவில் உள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தற்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்தான் அரசிடம் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் உத்தரப்பிரதேசத்துக்கு கூடுதலாக 13 தொகுதிகள் கிடைக்கும் நிலையில், தமிழ்நாடு 11 தொகுதிகளை இழக்க நேரிடும். தொகுதி மறுவரையறை மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறான தகவல்களை கூறுகிறார்.
தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து, 59 ஆக அதிகரிக்கும் என்று அமித்ஷா கூறுகிறார். இதன்மூலம் நிறைய குளறுபடிகள் உள்ளது தெரியவந்துள்ளது.
அரசியல் சாசனத்தை பாதுகாக்க கருப்பு உடையுடன் வந்துள்ளோம் கருப்பு என்பது தந்தை பெரியார் தந்த நிறம். தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு முரணாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






