
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா மற்றும் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 3 கட்ட பிரச்சாரப் பயணங்களை முடித்து, அடுத்ததாக இன்று முதல் 4ம் கட்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்க உள்ளார். 3 கட்ட பிரச்சாரங்களிலும் பல்வேறு மாவட்ட மக்களை சந்தித்து, அவர்களிடம் கழக சாதனைகளையும், திராவிட மாடல் 2.O வில் திமுக செய்ய உள்ள தொலைநோக்குத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, பாஜக அரசின் மக்கள் விரோத போக்கையும், தமிழ்நாடு மீதான வஞ்சகத்தினையும் தோலுரித்துக் காட்டி, அதிமுகவின் பின்னால் ஒளிந்து கொண்டு தமிழ்நாட்டை சூறையாடத் துடிக்கும் பாஜகவை கடுமையாக எதிர்த்தும் வருகிறார்.
இதேபோன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், கனிமொழி எம்.பி அவர்களும் மற்றும் இதர நட்சத்திரப் பேச்சாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் சுழன்று சுழன்று வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும், டெல்லியின் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்துவரும் எடப்பாடி பழனிசாமி, கண்கூடாக பார்க்கும் பாஜக தலைமையிலான அதிமுக கூட்டணி மீது மக்கள் கொண்டிருக்கும் எதிர்ப்பு மற்றும் வெறுப்புகளைக் கண்டும், திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கும் திமுக முன்னும், என்ன சொல்லி மக்களை சந்திப்பது என தெரியாமல் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்ததால் செய்வதறியாது திகைத்து வருகிறார்.

குறிப்பாக தனது ஆட்சியின் சாதனைகளைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லாததால், அவதூறு எனும் தனது டெல்லி எஜமானர்கள் கட்சியான பாஜகவின் தேசிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து பிரச்சாரங்களில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கழக தலைவர் தளபதி ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.
ஆனால், அந்தளவிற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிச்சல் இல்லை. கொரோனா காலத்தில் இவர் மட்டும் தான் திறமையாக செயல்பட்டார் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாமல், இந்த உலகில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிசாமியாக தான் இருக்கும். அவரிடம் நாம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்காக இவ்வாறு பேசுவது அநாகரிக செயல்.

இந்த அநாகரிக செயலை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி, எந்த காலத்திலும் அரசியலில் உச்சம் தொட முடியாது என்பதை மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். எத்தனை தேர்தல் வந்தாலும் அவருக்கு தோல்வி தான். 10 தோல்லியுடன், நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலுடன் 11 வது தேர்தலில் படுதோல்வியை சந்திப்பார். இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாத மனிதரை மக்கள் புறந்தள்ளுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று தொடர்ந்து அவதூறுகளை பேசி அரசியலில் பிழைப்பு நடத்த முடியும் என பழனிசாமி, பாஜகவின் திட்டங்களுக்கு துணைபோனால் மக்களிடம் தேர்தல் முடிவுகளில் சம்மட்டி அடி வாங்குவது உறுதி.






