
2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.
நேற்று தி.மு.க வேட்பாளர் பட்டியலை கழக தலைவைர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று 524 வாக்குறுதிகளுடன் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.
திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு எப்படி முக்கியத்தும் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோ அதேபோல், இந்த தேர்தல் அறிக்கையிலும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக முக்கியமாக இல்லத்தரசி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ”இல்லத்தரசிகள் தங்களது வீட்டுக்குத் தேவையான, வாஷிங் மெஷின், டி.வி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவோ அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் இத்தகைய பொருட்களுக்கு மாற்றாக வாங்கவோ இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் இப்பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






