
எளிமைக்கு அடையாளமாகவும், தலைமுறைகளைக் கடந்து பொதுவுடைமைக் கொள்கைகளை தூக்கிச் சுமந்த நூற்றாண்டு கண்ட தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியாகவும் திகழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு.
சிறுவயதில் இருந்தே அரசியல் ஆர்வம் கொண்ட நல்லக்கண்ணு, ஆரம்பத்தில் காங்கிரஸ் பெரியக்கத்தில் இருந்து பின்னர் கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் போராட்டங்களை மேற்கொண்டார். தனது இளம் வயது முதலே கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்த இவர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அப்போது நிலசுவந்ததாரர்களுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் களத்தில் நின்றார்.

சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தொடர்ந்து கழித்த இவர், அதன் பிறகும் தனது மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னின்று கர்ஜித்தார்.
தனது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிக்கே, அதனை திருப்பிக் கொடுத்தார். தமிழ்நாடு அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக வழங்கியது. அதில், பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

அதுமட்டுமின்றி முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து தகைசால் விருது அறிவிக்கப்பட்டு, 2-வது ஆண்டு விருது (2022-ம் ஆண்டு) நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதோடு ரூ.10 லட்சமும் வழங்கப்பட்ட நிலையில், அதே மேடையில் முதலமைச்சரின் நிதிக்கு அந்த தொகையுடன் தனது சொந்த பணம் ரூ.5000 பணத்தையும் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

இவ்வாறு, தன்னலம் கருதாது பொதுநலத்திற்காகவே வாழ்ந்த தோழர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நேற்று (பிப்.25) காலமானார். அன்னாரது மறைவுக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தோழமை கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதோடு சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 24 காவலர்கள் 3 சுற்றுகளாக 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று என்ற தோழர் நல்லகண்ணுவின் கோரிக்கையை ஏற்று, சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் நல்லகண்ணு அவர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்டு, உடல் பெறப்பட்டது.
சென்னை தியாகராய நகரில் இருந்து, சென்னை மருத்துவக் கல்லூரி வரை சுமார் 7 கி.மீ. வரை கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும், ஆதரவாளர்களும் அவரது உடலுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை செலுத்தி பின்னர் மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்தனர்.






