
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக அரசியல் சூழல் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்துக் காட்டமாக விமர்சித்தார்.
அப்போது நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், எல்லாவற்றையும் அசெம்பிள் (Assemble) செய்தால்தான் அது முழுமையான என்ஜின் ஆகும். ஆனால், விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜினாகவே இருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
மேலும் ”திமுகவின் தேர்தல் குழு முடிவுகளின் அடிப்படையிலேயே கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பந்தம் ஏற்படும். எதிர்க்கட்சிகள் அவசரக் கோலத்தில் தங்களது பணிகளைச் செய்கின்றன. ஆனால் 'நிதானமே வெற்றி தரும்' (Slow and steady wins the race) என்பதற்கு ஏற்ப திமுக நிதானமாகச் செயல்படும்.
பாஜக ஆட்சியில் ஜனநாயகம் என்பதே இல்லை. 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. முறைப்படி அந்தப் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்துதான் ஜெயலலிதா கடைசி காலத்தில் ஆட்சி நடத்தினார். அங்கு நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை இதுவரை எடப்பாடி பழனிசாமியால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை" என தெரிவித்துள்ளார்.






