
பல்கலைக் கழகங்களில் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர்களே துணை வேந்தர்களை நியமிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், துணை வேந்தர் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநருக்கு 3 மாதம் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு, நிலுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதில் பல்கலைக் கழகங்களில் முதலமைச்சர் வேந்தர்களை நியமிக்கும் மசோதாவும் அடங்கும்.
உச்சநீதிமன்றம் அளித்த ஒப்புதலை தொடர்ந்து தமிழ்நாடு அரசிதழில் துணை வேந்தர் நியமனம் தொடர்பான சட்டம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் துணை வேந்தர் நியமனம் புதிய சட்டம், பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிகளுக்கு எதிராக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமல் சட்டத்திற்கு தடை விதித்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பல்கலைக் கழக துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமனம் செய்யும் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
அதோடு இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன்படி, இந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விடுமுறை கால அமர்வு விசாரித்து அவசர அவசரமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டியதற்கான அவசியம் என்ன இருக்கிறது ?
மேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, துணை வேந்தர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க உரிய அமர்வை அமைக்க வேண்டும். ஆறு வாரத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கூறிய கருத்துகளும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வரவேற்கிறேன்.

தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுகிற பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர்களை முதலமைச்சர் நியமிக்கிற அதிகாரத்தை தடுத்து நிறுத்துகிற ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் உரிய பாடத்தை புகட்டியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிற போதெல்லாம் நீதிமன்றம் இத்தகைய படிப்பினையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியும், தமிழக விரோத போக்கும் கொண்டுள்ள ஆர்.என். ரவி மீது எத்தனை முறை நீதிமன்றம் இடித்துரைத்தாலும் அதில் பாடம் கற்க அவர் தயாராக இல்லை. ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அவர் தாங்கிப் பிடிக்கிற பா.ஜ.க.வுக்கும் உரிய பாடத்தை வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கிறாரோ, அதுவரை தமிழ்நாட்டில் பா.ஜ.க. எதிர்ப்புணர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைவதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. இவரது தமிழக விரோதப் போக்கினால் பா.ஜ.க. எந்த காலத்திலும் காலூன்ற முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.






