
நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருப்பதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் வரப் போகும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு. உலகில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடக்கும் விவகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதுதான் கேயாஸ் தியரியின் தத்துவம்! இந்த கேயாஸ் தியரி, பிரதமர் மோடியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் கடந்த 30-ஆம் தேதி வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகிதப் பரஸ்பர வரியும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித அபராத வரியும் என்று மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 6 நாளிலேயே இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்தார். இடைப்பட்ட 6 நாட்களில் என்ன நடந்தது? என்பதை கேயாஸ் தியரி சொல்லும்!
’’அமெரிக்கா வரியைக் குறைத்தது போல, இந்தியாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியைப் பூஜ்யமாக்க நடவடிக்கையை முன்னெடுப்பார்கள். பிரதமர் மோடி, அமெரிக்கப் பொருட்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய்) எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் பல பொருட்களைக் கூடுதலாக வாங்கவும் சம்மதித்துள்ளார்’’ எனச் சொல்லியிருக்கிறார் ட்ரம்ப்.

இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததை அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்கப் பொருள்களுக்கு இறக்குமதி வரியைப் பூஜ்யமாக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி.
அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வைத்துவிட்டோம் எனத் தம்பட்டம் அடித்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில்துறையினருக்கும் ஏற்படப்போகும் பேராபத்தை 18 சதவிகித வரி குறைப்பைக் காட்டி மறைக்க முயல்கிறது மோடி அரசு.
அமெரிக்காவிடம் இருந்து இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடியைச் சம்மதிக்க வைத்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக் களிப்போடு சொல்கிறார். அதாவது, இந்தியாவின் மொத்த பட்ஜெட் மதிப்பில் இது 85 சதவிகிதம். 45.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற யானை, இந்தியாவின் உள்ளூர் வர்த்தகம் என்கிற கரும்புக் காட்டிற்குள் நுழைந்து துவம்சம் செய்யப் போகிறது. நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறார்.
18 சதவிகித வரியை அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை. சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த சொல்லி, இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரியை விதித்துவிட்டு, இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்கப் பொருட்களுக்குப் பூஜ்ய வரி என்று சொல்கிறது.

நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி. நம்மை கட்டுப்படுத்த அமெரிக்கா மாகாணங்களில் இந்தியாவும் ஒன்றா? இந்தியாவை, அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டாரா? போரே நடக்காமல், ஏவுகணைகள் ஏவாமல் இந்தியா மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. அதற்குத் துணை போயிருக்கிறார் பிரதமர் மோடி.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என எப்படிக் கொண்டாட முடியும்? 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் அளவிற்கு இந்தியச் சந்தையைக் கட்டுப்பாடின்றித் திறந்து வைத்தால், இந்திய விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்துறையினரின் வாழ்வாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.
இந்தியாவின் மிகப்பெரிய சந்தையும், மக்கள் தொகையும் தங்கள் நாட்டின் வேளாண் பொருட்களை அதிக அளவிற்கு விற்பதற்கு உதவும். இதனால் கிராமப்புற அமெரிக்காவின் பொருளாதாரம் செழிக்கும் என்று அமெரிக்காவின் வேளாண்துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் கூறியிருக்கிறார். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் முயற்சியா இந்த வர்த்தக ஒப்பந்தம் என்கிற சந்தேகம் எழுகிறது.
அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் சோயாபீன், சோளம், பருத்தி மற்றும் கோதுமை போன்றவை இறக்குமதியானால், இந்திய விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை உள்நாட்டுச் சந்தையில் பெருமளவில் குறையக்கூடும். பாதாம், ஆப்பிள் போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால் வியாபாரப் போட்டி அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்காவில் விவசாயம் என்பது பெரும்பாலும் சிறிய அளவில் நடைபெறுவதில்லை. அமெரிக்க அரசு அதிக அளவில் மானியம் தருவதாலும் வேளாண் பணிக்காகப் பெரிய இயந்திரங்கள் கிடைப்பதாலும் ஹெக்டேர் கணக்கில் பெரும் பண்ணைகளாகவே அங்கு விவசாயம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 86 சதவீதம் சிறு மற்றும் குறு விவசாயிகள் இருப்பதால் அவர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அமெரிக்காவின் பெரும் பண்ணை விவசாயிகளுடன் போட்டி போட முடியாது. அமெரிக்க விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைப்பதால் உற்பத்திப் பொருட்களை மலிவான விலைக்குத் தரும் சூழல் ஏற்படும்போது இந்திய விவசாயிகள் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
அமெரிக்காவின் பால் பொருட்கள் மீதான வரி குறைப்பு கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு ஏற்கும் சூழலில் இந்தியாவின் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருள் மூலம் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விதைகள் இந்தியச் சந்தைக்குள் ஊடுருவினால் அது இந்தியாவின் விவசாயத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியர்களின் உடல்நலனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இந்திய விவசாயிகளையும் வர்த்தகர்களையும் பாதிக்கும் அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் பற்றி ஒன்றிய பாஜக அரசு நாட்டுமக்களுக்கு விளக்கம் தரக் கோரினால், இந்தியாவிற்கு ஏற்படப்போகும் பிரகாசமான எதிர்காலத்தைக் கண்டு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொறாமைப்படுவதாக ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் வடிகட்டிய பொய்யைச் சொல்லியிருக்கிறார். அந்த "பிரகாசமான எதிர்காலம்" என்னென்ன என்பதைப் பட்டியலிடலாமே மிஸ்டர் பியூஸ் கோயல்? தமிழ்நாட்டிற்கு வந்து அதிமுக கூட்டணிக்காகக் களமாடி அதற்கான காரண காரியங்களை எல்லாம் விளக்கும் பியூஸ் கோயல் அமெரிக்க உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பற்றி மட்டும் ஏன் விரிவாகப் பேச மறுக்கிறார்?

இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 18 சதவிகிதமாக குறைத்ததை மோடி அரசின் வரலாற்றுச் சாதனையாகப் பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி 3 சதவீதமாகவே இருந்த நிலையில் அதனை மோடி அரசுதானே தனது தவறான வெளியுறவுக் கொள்கையால் 50 சதவீதம் வரை உயர்த்தியது. அப்போது ஓடி ஒளிந்து பதுங்கியவர்கள் எல்லாம், 18 சதவிகிதமாக குறைத்ததற்கு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் தொடங்கி நாடுமுழுவதும் ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டபோதும் பிரதமர் மோடி எங்கே பதுங்கியிருந்தார்?
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி அதனைப் பெட்ரோலியப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு விற்று அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட்டுக்கள் கொள்ளை லாபம் அடைவதற்கு உதவுவதிலேயே குறியாக இருந்த மோடி அரசு, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவில் தொழில்துறை நலிவடைந்து, வேலைவாய்ப்புகள் பறிபோனதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
பிரதமர் மோடி தனது சுயநலத்தாலும், தவறான வெளியுறவுக் கொள்கையாலும், இந்திய விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை எடுத்தபோதும் தன்னை விவசாயி எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பழனிசாமி இதுவரை வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்குப் பாதகமான வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்தபோது முட்டுக்கொடுத்த வாதாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது என்ன சொல்லப் போகிறார்?






