
மாணாக்கர்களின் கல்விச் சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும், 426 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (04.02.2026) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2025-26ஆம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000-க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக 574 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் பின்னர், 823 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (04.02.2026) முதல் 09.02.2026 வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கெளரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.








