
இந்திய அளவில் S.I.R, வாக்குத் திருட்டு, மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி மறுப்பு உள்ளிட்ட வஞ்சிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டிச.1 அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.17) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அண்மைக் காலங்களில் இந்திய தபால் துறை வங்கி,இன்ஷ்யூரன்ஸ் போன்ற நிதிசேவைகளில் கவனம் செலுத்துவதால் அஞசல் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அதன் பொருட்டு அலுவலர்கள் புதிய பணிகளுக்கு மடைமாற்றப்பட்டு அஞ்சல் சேவைகள் பாதிப்புக்குள்ளானதால் தபால் நிலையங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளதா? சென்ற ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள்மூடப்பட்டன ? மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு , எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எத்தனை புதிய அலுவலகங்கள் திறக்கப் பட்டன? நிதிச்சேவைகளால் அஞ்சல்துறையின் வருவாய் மற்றும் லாபம் பெருகி உள்ளதா? அல்லது ,இழப்பு ஏற்பட்டுள்ளதா?பெருமளவிலான காலிப் பணியிடங்களால் தபால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என அஞ்சல்துறையின் செயல்பாடுகள் பிரச்சினைகள் குறித்த பல்வேறு கேள்விகளை டி.ஆர்.பாலு எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய அஞ்சல் துறை இணை அமைச்சர் திரு. டாக்டர் பெம்மசானி சந்திர சேகர்,"5 ஆண்டுகளில் 8565 புதிய தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 434 ஆக இருந்த தபால் நிலையங்களின் எண்ணிக்கை 2025 ல் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது.
சென்ற நிதி ஆண்டான 2024-25 ல் அஞ்சல் துறையின் மொத்த செலவு ரூ.37, 528 இருந்த நிலையில் மொத்த வருவாய் ரூ.12613 மட்டுமே. எனவே, வருவாய் பற்றாக்குறை ரூ.24915 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், நிதிசார்ந்த சேவைகளை மேற்கொண்டதால் அஞ்சல் துறை செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.






