
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசுவது,தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிமுக மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் பேச்சுக்கு திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் தீபக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,”அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் அவர்கள் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கவை.
மாற்றுத்திறனாளிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையான முயற்சிகள் நடைபெற்று வரும் இந்நேரத்தில், இத்தகைய பொறுப்பற்ற மற்றும் அவமதிப்பு நிறைந்த பேச்சுகள் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தும் வகையில் அரசியல் உரையாடல்களில் அவமதிப்பான வார்த்தைகளை பயன்படுத்துவது மிகுந்த வேதனையையும் சமூகப் பாகுபாட்டையும் உருவாக்குகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறுவது என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல; அது அவர்களின் உரிமையும், சமூக முன்னேற்றத்தின் அடையாளமும் கூட. இந்த உயரிய பொறுப்பினை இழிவுபடுத்தும் நோக்கத்திலான கருத்துகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
மாற்றுத்திறனாளி எனும் மரியாதைமிக்க பெயரை முதன்முதலில் வழங்கியது கலைஞர் அவர்களே. இந்தப் பெயரை மாற்றமின்றி உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதே பெயரையே பயன்படுத்தினர்.
திராவிடத்தை சார்ந்து இருக்கக்கூடிய அதிமுகக் கட்சியில் பொறுப்பில் இருக்கும் மாவட்டச் செயலாளரே, மனித மாண்பை மறந்து இத்தகைய செயலில் ஈடுபடுவது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசுவது, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் – 2016 இன் சரத்து 92 படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் பொது வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளை இவ்வாறு இழிவுபடுத்துவது என்பது ஐ.நா. மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கை படி மிகக் கடுமையான தவறான செயலாகும்
இதனால்,ஆதி ராஜாராம் அவர்கள் வழங்கிய கருத்துகளை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.






