
பீகாரை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. SIRக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.
அப்போது, இது முக்கியமான பிரச்னை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்யும் காலம். அடுத்து ஜனவரியில் பொங்கல் அறுவடை காலம் தொடங்க உள்ளது. டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகை வருகிறது. இந்த நேரங்களை பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முழுமையாக பங்கேற்க இயலாது என்பதால், இந்த நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரியாக இருக்காது என்று கபில் சிபல் வாதிட்டார்.
மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கி விட்டது. ஒரு மாதத்தில் முடிக்க உள்ளனர். இது வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் லட்சக்கணக்கான படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. அதற்கு போதிய அவகாசம் இல்லை என்றும் கபில் சிபல் குற்றம் சாட்டினார்.
மேலும், தேர்தல் ஆணையம் அவசர, அவசரமாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் தமிழ் நாட்டை விட நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், S.I.R -க்கு எதிராக தி.மு.க தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கின் விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.








