
திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து அறிவுச்செயல்பாடுகளை முன்னெடுக்கும் இயக்கம் என்பது அனைவராலும் அறியப்பட்டதே.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்ட கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் கழகம் இளைஞர் அணிச்செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், `முரசொலி’ பாசறைப் பக்கம், `முத்தமிழறிஞர் பதிப்பகம்’, இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து கருத்தியல் பயிற்சி அளிப்பது, கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், கலைஞர் நிதிநல்கை திட்டம் ஆகிய கருத்தியல் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி `தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்துகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி செயல்படுத்தும் `தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் மகாத்தான நிகழ்ச்சியில், 08.11.25 காலை 9.30 விழாவில் கழகத்தலைவர், முதலமைச்சர் அவர்கள் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் தொடங்கி வைக்கவுள்ளார்.
அறிவார்ந்த ஆவணம் வெளியீடு
75 ஆண்டுகால வரலாறு கொண்ட தி.மு.கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து எழுத்தாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்கள், தேசிய கட்சித் தலைவர்கள், கழகத்தலைவர் உள்ளிட்ட தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய, 1,120 பக்கங்கள் கொண்ட `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் புத்தகம், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் உருவாகியுள்ளது.
இந்த அறிவார்ந்த ஆவணத்தை முதலமைச்சர் அவர்கள் வெளியிட, கழகப் பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பெற்றுகொள்கிறார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கழக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, கழகத்துணைப் பொதுச்செயலாளர்கள், கழக இளைஞர் அணிச்செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முன்னிலை வகிக்கும் இந்த விழாவில் `தன்மானம் காக்கும் கழகம்’ என்னும் மேடை நாடகமும் நடைபெறவுள்ளது.

இரு நாள் கருத்தரங்கம்
முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைக்கும் `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் பத்து அமர்வுகளுடன் 08.11.25 மற்றும் 09.11.25 ஆகிய இருநாடுகள் நடைபெறுகின்றன.
கழகத்துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., கழக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கழக கொள்கைபரப்புச்செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, சென்னை இதழியல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் இ.எஸ்.பன்னீர்செல்வன், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின்;
கழகக் கல்வியாளர் அணி தலைவர் செந்தலை கவுதமன் ஆகியோர் தலைமை வகிக்கும் இந்த அமர்வுகளில் கழகத்துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., கழகத்துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., கழக கொள்கை பரப்புச்செயலாளர் முனைவர் இரா.தி.சபாபதிமோகன், கழக மருத்துவம் அணிச்செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்துணைப் பொதுச்செயலாளர் சே.எம்.மதிவதனி உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர். 09.11.25 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்க நிறைவுரை ஆற்றியுள்ளார்.
முற்போக்கு புத்தகக்காட்சி
தமிழ்நாட்டிலேயே முதல் முயற்சியாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம் போன்ற முற்போக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் `முற்போக்கு புத்தகக்காட்சி’யைக் கழக இளைஞர் அணி நடைபெறுகிறது. குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்களின் 58 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த முற்போக்கு புத்தகக்காட்சியில் அனுமதி இலவசம்.
08.11.25 முதல் 16.11.25 வரைநடைபெறவிருக்கும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யில் தினந்தோறும் புத்தர் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, கோவன் கலைக்குழு, பாப்பம்பாடி ஜமா, நிகர் கலைக்கூடம், மாற்று ஊடக மையம் கலைக்குழு ஆகிய கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் பகுத்தறிவு மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இத்துடன் கழகக் கொள்கைபரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, திராவிடர் கழகப்பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், த.மு.எ.க.ச பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் யுகபாரதி, கவிஞர் சுகிர்தராணி ஆகிய முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் நடைபெறுகின்றன.
`தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ நடைபெறவிருக்கும் இரு வாரங்களும் குடிநீர் வசதி, கழிவறை வசதி, வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.








