தமிழ்நாடு

காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!

மாநில அளவிலான காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்களில் தமிழகம் முன்னிலை இருக்கிறது.

காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
umapathymuthukrishnan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உள்ளூர் காலநிலை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான மற்றொரு முன்னோடி முயற்சியாக, தமிழக அரசு இன்று மாவட்ட அளவிலான கார்பன் நீக்கத் திட்டங்களுடன் மாநில அளவிலான காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை மற்றும் வசுதா அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது, தரவு சார்ந்த, சமூகத்தால் வழிநடத்தப்படும் காலநிலை சவால்களுக்கான தீர்வுகளை வலுப்படுத்தி காலநிலை நிர்வாகத்தில் தமிழ்நாட்டை முன்னணியில் நிலைநிறுத்துகிறது.

இந்த திட்டத்தை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மாற்றக்குழு உறுப்பினர் மான்டெக் சிங் அலுவாலியா, சுப்ரியா சாகு இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்  (வனத்துறை தலைவர்) டாக்டர். ஜெயந்தி முரளி இ.வ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வசுதா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி, எஸ் ஜே. சிறு இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர், முனைவர் டி. கார்த்திகேயன், இ.ஆ.ப, முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக, நீலகிரி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்நான்கு மாவட்டங்களும்,  தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP - 2022–23) 10.38% பங்களிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ஆய்வுகள், இயற்கை எரிசக்தி உபயோகித்தல் மற்றும் பயண முறையில் மாற்றங்களை செயல்படுத்துவதன் மூலமாகவும், தொழில்துறை செயல்திறன் மற்றும் அவற்றுக்கான இயற்கை சார்ந்த தீர்வுகள் ஆகிய செயல்பாடுகளின் மூலம் 2050ம் ஆண்டுக்குள், திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் 92% வரை குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. மேலும், இந்த மாவட்டங்களில், வன மறுசீரமைப்பு, வேளாண்காடுகள், ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை மறுசீரமைப்பதன் மூலம் 2050 ஆம் ஆண்டுக்குள் 2.97 மில்லியன் டன் அளவு கரியமிலவாயுவை நிகரான உமிழ்வுகளைப் மட்டுப்படுத்த இயலும்.

மாண்புமிகு அமைச்சர் தனது உரையில், “இன்று நான்கு மாவட்டங்களுக்கான, கார்பன் நீக்க வழிமுறைகள் கொண்ட திட்டம் மற்றும் காலநிலை தணிப்பு நடவடிக்கை கண்காணிப்பு’ என்ற வலைத்தளம் மூலம், காலநிலை இலட்சியத்தை அளவிடக்கூடிய மற்றும் பொறுப்புணர்வுள்ள செயலாக மாற்றுகிறோம் என தெரிவித்தார். இந்த திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்தவுள்ள நான்கு மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
10% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. இது காலநிலைக் கொள்கை மட்டும் அல்ல; ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கையாகும். இந்த கொள்கையானது, ஆயிரக்கணக்கான பசுமை வேலைகளை உருவாக்குவது மட்டுமின்றி மீள்தன்மை கொண்ட சமூகத்தையும் நமது தொழில்களையும் வலுப்படுத்துகிறது. மேலும், நமது இயற்கை பாரம்பரியத்தையும் பாதுகாக்கிறது. இதன்மூலம், கார்பன் நிகர பூஜ்ஜிய நிலையை எட்டுவதற்கு இந்தியா நாட்டினை  தமிழ்நாடு இட்டு செல்லும்.

தமிழ்நாடு காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு என்பது உமிழ்வுகள், எரிசக்தி அமைப்புகள், காலநிலை பாதிப்புகள், நில பயன்பாட்டில் மாற்றம் மற்றும் மீள்தன்மை நடவடிக்கைகள் முழுவதும் காலநிலை தரவை ஒருங்கிணைக்கும் ஒரு மின் நுண்ணறிவுத் தளமாகும். இந்த தளம் ஆதார அடிப்படையிலான திட்டமிடல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் வெளிப்படையான முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றைச் செயல்படுத்துவது மட்டுமின்றி, நிகர பூஜ்ஜியம் மற்றும் மீள்தன்மை கொண்ட வளர்ச்சி நோக்கிய மாநிலத்தின் பயணத்தை ஆதரிக்கிறது.

இந்த திட்டம் குறித்து பேசிய திருமதி சுப்ரியா சாகு இ.ஆ.ப., "காலநிலை குறித்த பொறுப்புகள் இல்லாமல், காலநிலை இலட்சியம் முக்கியத்துவம் பெறாது என்பதை தமிழகம் நிரூபிக்கிறது. மாவட்ட அளவிலான கார்பன் நீக்கத் திட்டங்கள் மற்றும் நிகழ்நேர காலநிலை நடவடிக்கை கண்காணிப்பின் மூலம், காலநிலை நடவடிக்கைகளை அறிக்கைகளிலிருந்து, அமைப்புகளாகவும், காலநிலை மாற்ற நோக்கங்களை அளவிடக்கூடிய மாற்றங்களாக நாம் மாற்றுகிறோம். காலநிலை நிர்வாகம் என்பது மக்கள் வாழும் இடத்தில் இருக்க வேண்டும். அதன் முன்னேற்றமானது எல்லோராலும் காணப்படும் வகையிலும், கண்காணிக்கப்படும் வகையிலும் இருக்க வேண்டும்.” என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
umapathymuthukrishnan

=> மாவட்ட அளவிலான காலநிலை நடவடிக்கை சிறப்பம்சங்கள் :-

நீலகிரி :

* 2050ம் ஆண்டுக்குள், திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் 77% போக்குவரத்துத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் குறைக்கலாம் (448 கிலோ டன் கரிம வாயு உமிழ்வு)

* 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன், நடுநிலைமையை அடையத் தயாராக உள்ளது

* இந்த திட்டத்தின் தூண்களாக, நிலைதன்மை கொண்ட சுற்றுலா மற்றும் இயற்கை சார்ந்த கார்பன் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளன.

இராமநாதபுரம் :

* 2047 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலைமைக்கான பாதை.

* மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களை குறைக்கும் உத்திகளின் மூலம் மொத்த உமிழ்வில் 25% குறைக்கலாம்.

• கார்பன் நடுநிலையாக்கப்பட்ட சுற்றுச்சூழல்-ஆன்மீக மையமாக இராமேஸ்வரத்தை மாற்றுதல்.

விருதுநகர் :

* தொழில்துறையில் குறிப்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர ஜவுளித்துறைகளில் கார்பன் உருவாதலைத் தடுப்பதன் மூலம், தோராயமாக 20% உமிழ்வைக் குறைக்கலாம்.

* வேளாண்காடுகள் மற்றும் சஞ்சீவி மலை மறுசீரமைப்பு மூலம் 1.4 மில்லியன் டன் கார்பனுக்கு சமமான உமிழ்வைப் மட்டுப்படுத்தலாம்.

கோயம்புத்தூர் :

* மின் வாகனங்களுக்கு மாறுவது, பொதுப் போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் மோட்டார் வாகனங்கள் இல்லாத பயணங்கள் ஆகிய நடவடிக்கை மூலம் 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் 22% குறைக்கலாம்.

* சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் சீர்மிகு காலநிலை சார்ந்த நகர்ப்புற வளர்ச்சியை இயக்குவதற்கான புது யுக்திகள்.

“இந்த மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற வழிமுறைப்பாதைகள், தெளிவான துறைசார் தலையீடுகளுக்கு வழிவகுக்குகின்றன. மேலும், முதலீட்டுக்கான செயல்திட்டங்கள், காலக்கெடு மற்றும் நிறுவன கட்டமைப்புகள் போன்றவற்றின் மூலம், காலநிலை நடவடிக்கையானது, சமூகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அளவிடக்கூடிய முடிவுகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

“தமிழ்நாட்டின் காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு மற்றும் மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள் அறிவியல், தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து சிந்திக்க வைப்பதுடன், அளவிடக்கூடிய காலநிலை செயல் திட்டங்களுக்கான மாதிரியை உருவாக்குகின்றன. துறைசார் உமிழ்வு குறைப்பை உறுதி செய்வதற்காக பரவலாக்கப்பட்ட செயல் திட்டங்களுடன் தரவை ஒருங்கிணைப்பதன் மூலம் தனித்துவமாக திகழ்கிறது, என்று வசுதா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில்,‘தமிழ்நாட்டின் சாதனைகள், வாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான தொலைநோக்குப்பார்வை’ என்ற தலைப்பின் கீழ் ஒரு விரிவான விளக்கக்காட்சியை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் சேகர் இ.ஆ.ப விளக்கினார். மேலும், ‘பசுமை போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ பற்றிய விரிவான விளக்கக்காட்சியானது சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் இ.ஆ.ப விரிவாக எடுத்துரைத்தார்.

banner

Related Stories

Related Stories